PUBLISHED ON : ஜூன் 26, 2011
ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?
எஸ்.பிரகதீஸ்வரன், மதுரை
ஸ்டேட்டின் மாத்திரை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை நன்கு குறைக்கும் மருந்து வகையை சேர்ந்தது. அதுமட்டுமின்றி ரத்தக்குழாய்களுக்கு பல வகைகளில் நன்மை தருகிறது. மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள், பக்கவாதம், வேறு ரத்தக்குழாய் நோயாளிகள், ரத்தத்தில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளவர்கள் அவசியம் ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தாக வேண்டும். ஸ்டேட்டின் மாத்திரை எடுப்போரில் மிக குறைந்த அளவினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் என்பது உண்மையே. ஆனால், ஸ்டேட்டின் மாத்திரையால் கிடைக்கும் நன்மை அதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, நீங்களாக ஸ்டேட்டின் மாத்திரையை நிறுத்தக் கூடாது.
எனக்கு 16 வயதாகிறது. எக்கோ பரிசோதனை செய்ததில் "Large Muscular V.S.D' என்ற ஓட்டை இருப்பதாக வந்துள்ளது. எனக்கு ஆபரேஷன் தேவையா அல்லது தானாகவே சரியாகி விடுமா?
மோகன்குமார், அவனியாபுரம்
V.S.D.,
என்பது Ventricular Septal Defect என்பது சுருக்கம். இது இதயத்தின் கீழிரண்டு பாகங்களுக்கு இடையே உள்ள ஓட்டையை குறிப்பிடுவது. இது பிறவியில் இருந்தே ஏற்படும் நோய். இந்த ஓட்டை உங்களுக்கு பெரியளவில் உள்ளதாலும், உங்களுக்கு 16 வயதாகி விட்டதாலும், இனிமேல் அது, இயற்கையாக மூடுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, அவசியம் ஆபரேஷன் செய்து இந்த ஓட்டையை மூடியாக வேண்டும்.எனக்கு அடிக்கடி நெஞ்சின் இடதுபக்கம் வலி வந்து நின்று விடுகிறது. டிரெட்மில் பரிசோதனை செய்ததில் பிரச்னை இல்லை. என் டாக்டர், முன்னெச்சரிக்கையாக, Atorva Statin, Clopidogrel ஆகிய மாத்திரைகளை தந்துள்ளார். இதை தொடர்ந்து எடுக்கலாமா?
பி.கண்ணதாசன், ராஜபாளையம்
உங்களுக்கு நெஞ்சில் ஏற்படும் வலி இதய வலி அல்ல. ஏனெனில் டிரெட்மில் பரிசோதனை முடிவு நார்மலாக உள்ளது. இந்த வலி தசையில் இருந்தோ அல்லது நரம்பு வலியாகவோ, வாயு கோளாறால் ஏற்படும் வலியாகவோ இருக்கக் கூடும். எனவே, அதற்கேற்ப மருந்துகளை சில வாரங்கள் எடுத்தால் போதுமானது. இதய வலி அல்ல என்பதால் உங்களுக்கு Clopidogrel தேவை இல்லை. Atorva Statin மாத்திரையை தொடர்ந்து அவசியம் எடுத்தாக வேண்டும்.
எங்கள் வீட்டில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை அடிக்கடி சமையலில் பயன்படுத்துகிறோம். இதில் எது நல்லது?
சி.தங்கச்சாமி, பரமக்குடி
தேங்காய் எண்ணெயில் Saturated Fat என்ற கொழுப்புச் சத்து மிக அதிகம் உள்ளது. எனவே, இந்த எண்ணெயை அவசியம் சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. சமையலுக்கு சிறந்த எண்ணெயாக கருதப்படுவது ஆலிவ் ஆயில் தான். ஆனால், அதன் சுவையை நாம் விரும்பாததாலும், விலையும் அதிகம் என்பதாலும், பெரும்பாலோர் உபயோகிப்பது இல்லை. நாம் உபயோகிக்கும் எண்ணெய் வகைகளில் தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவை மூன்றும் சமையலுக்கு உபயோகிக்கலாம். சமையலுக்கு எண்ணெயை தாளிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொரிப்பதற்காக எந்த எண்ணெயையும் பயன்படுத்தவே கூடாது. அதாவது வடை, பஜ்ஜி, அப்பளம், முறுக்கு, பூரி போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அறவே தவிர்ப்பது சிறந்த உணவு பழக்கமாகும்.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.
