"இருதய நோயாளிகள் குளிர்ந்த நீரை தவிர்ப்பது நல்லது'
"இருதய நோயாளிகள் குளிர்ந்த நீரை தவிர்ப்பது நல்லது'
PUBLISHED ON : ஜூலை 03, 2011

இருதய ஓட்டை அடைப்பு சிகிச்சை செய்த பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி
இருதயத்தில் ஓட்டை என்பது பிறவியிலேயே ஏற்படும் ஒரு வியாதி. இருதய ஓட்டை என்பது ஒரு பொதுவான வார்த்தை தான். இதில், இருதயத்தின் எந்த இடத்தில், எந்தளவு பெரிய ஓட்டை உள்ளது, இதனால் இருதயம் எவ்வளவு வீங்கி உள்ளது மற்றும் நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகரித் துள்ளதா என்பதைப் பொறுத்தே அதன் தீவிர தன்மையை அறிந்து கொள்ள முடியும். பொதுவாக கூற வேண்டும் என்றால், இருதயத்தில் ஓட்டையை அடைத்த பின் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆகவே, குடும்ப வாழ்விலோ, தாய்மை அடைவதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை.
எனக்கு உ.ஊ., அளவு 35 சதவீதமாக உள்ளது. இதற்காக மாத்திரை எடுத்து வருகிறேன். நான் குளிர்ந்த நீரை குடிக்கலாமா? ஸ்பிலிட் 'ஏசி'யை பயன்படுத்தலாமா?
வி.ராமசாமி, அருப்புக்கோட்டை
E.F., என்பது இருதய பம்பிங் திறனைக் குறிக்கும். அதாவது, Ejection Fraction என்பதன் சுருக்கம் இது. இது நார்மலாக 60 சதவீதம் இருக்க வேண்டும். உங்களுக்கு 35 சதவீதம் என்பது குறைவான அளவாகும். இதற்காக தொடர்ந்து, வாழ்நாள் முழு வதும் மாத்திரை எடுப்பது அவசியமே. குளிர்ந்த நீர் குடிப்பதை இருதய நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சளி பிடித்தால் இருதய நோயாளிகளுக்கு மிகத் தீவிரமாக 'ஹார்ட் பெயிலியர்' ஏற்படும் தன்மை உள்ளது. எனவே, இருதய நோயாளிகள் அனைவரும், கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை பருகுவதே நல்லது. ஏர்கண்டிஷனை பொறுத்தவரை இருதய நோயாளிகள் பயன்படுத்தலாம். ஆனால் அதன் 'பில்டரை' தினமும் சுத்தம் செய்வது முக்கியம்.
என் நெஞ்சின் இடது அல்லது வலது பகுதியில் குத்துவது போல வலி ஏற்படுகிறது. இது இருதய வலியா?
எஸ். கண்ணன், காரைக்குடி
பொதுவாக இருதய வலி என்பது நெஞ்சின் நடுவில் அழுத்தமாக நடக்கும் போது ஏற்படும். குத்துவது போல ஏற்படும் வலி, இருதயத்தில் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. இருந்தாலும் நீங்கள் 'எக்கோ' மற்றும் 'டிரெட் மில்' பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவை இரண்டின் முடிவும் நார்மலாக இருந்தால், இருதய வலி அல்ல என்பது உறுதியாகும். இதில் ஏதும் கோளாறு இருந்தால், அதற்கேற்ப சிகிச்சை முறை அமையும்.
எனது வயது 40. நான் கடந்த ஒரு ஆண்டாக ரத்தக் கொதிப்புக்கு, 'Amlodipine 5mg' என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது ரத்த அழுத்தம் குறைவாக உள்ளது. நான் மாத்திரையை நிறுத்த விடலாமா?
கே.முத்துராமன், திண்டுக்கல்
ரத்தக் கொதிப்பு ஒரு வாழ்க்கை முறை வியாதி. இதற்கு முதலில், நீங்கள் உணவுக் கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை அவசியம் கடைபிடிக்க வேண்டும். 'அம்லோடிபின்' எடுத்த பின், உங்களுக்கு ரத்த அழுத்தம் சரியாக அமைந்தால், டாக்டரின் ஆலோசனையுடன், ரத்த அழுத்தம் சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா, மாத்திரையை குறைக்க முடியுமா என நன்கு ஆராய்ந்து, அதன் பின்னரே மாத்திரை அளவை குறைக்கலாம். ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை எடுப்பது தவறானது அல்ல. அம்லோடிபின் போன்ற பக்க விளைவில்லாத மாத்திரையை எடுப்பதால், உங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.
டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.
