தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை: பார்சல் சாப்பாட்டில் பல கிருமிகள்

மூலிகை: பார்சல் சாப்பாட்டில் பல கிருமிகள்

மூலிகை: பார்சல் சாப்பாட்டில் பல கிருமிகள்


PUBLISHED ON : ஆக 28, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காட்டு ஏலக்காய்



பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன. பின் இவை, உணவு ஆறும்போதோ அல்லது புளிக்கும் போதோ, பல்கி, பெருகி, உண்பவரின் வயிற்றில், பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி சூடான உணவுகளை அடைப்பதால், பாலித்தீன் பைகளிலுள்ள எத்திலீன், வயிற்றில் அழற்சியை ஏற்படுத்துவதுடன், புற்றுநோய் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. பார்சல் உணவுகளை வாங்குவதற்கு, பிளாஸ்டிக் அல்லாத நம் வீட்டில் அன்றாடம் சுத்தம் செய்யும் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.



சாதாரணமாக நமது உடலின் உட்பகுதியில், நுண்கிருமிகள் காணப்படுவதில்லை. ஆனால் வாயின் உட்புறம், குடல், தோல் போன்றவற்றில் பல்வேறு வகையான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இயற்கையாகவே காணப்படும் சில நுண்கிருமிகள், நன்மை செய்யக்கூடியவை. ஆனால், பிறரிடமிருந்து தொற்றக்கூடிய அல்லது நோய்களை விளைவிக்கக்கூடிய ஆபத்தான நுண்கிருமிகளும், இந்தப் பகுதிகளில் நுழைந்து விடலாம். இவை பல்வேறு வகையான நோய்களை நமக்கு ஏற்படுத்துகின்றன. இவற்றில், வாய் மற்றும் உள்ளங்கைகளில் காணப்படும் கிருமிகளே, பலவிதமான தொற்றுநோய்களுக்கு காரணங்களாக இருக்கின்றன.



வாய் மற்றும் தொண்டையில் ஸ்டேப்பிலோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், நெய்செரியா, சூடோமோனாஸ், புரோட்டியஸ், ஹூமோபிலஸ், கிளோஸ்டெரிடியம், கார்னிபாக்டீரியம், மைக்ரோபாக்டீரியம், ஆக்டினோமைசிட்டஸ், ஸ்பைரோகேட்ஸ், மைக்கோபிளாஸ்மாஸ் போன்ற பலவகையான பாக்டீரியாக்கள் மற்றும் பல்வேறு வகையான நுண்கிருமிகள், வாய், தொண்டை, மூக்கு போன்ற உணவுப்பாதையில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி கைகளில் விரலின் நக இடுக்கு உட்புறம், நகத்தின் நுனி, உள்ளங்கை, புறங்கை, விரலிடுக்குகள் போன்ற பகுதிகளில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இவற்றில், விரலின் நக இடுக்குகளில், பிற பகுதிகளை விட, 75 மடங்கு அதிகமான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. உள்ளங்கையில், 4,200க்கு மேற்பட்ட நுண்கிருமிகள், நிரந்தரமாக குடி கொண்டிருக்கின்றன.



இட்லி மாவை புளிக்கச் செய்தல், உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு, 150 வகையான கிருமிகள் பயன்பட்டாலும், எஞ்சிய பல கிருமிகள், பல்வேறு வகையான நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வியர்வை, தோலின் எண்ணெய் சுரப்பு, ஹார்மோன்கள், வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், நாம் பயன்படுத்தும் சோப்பு, கை கழுவுதல் ஆகியவற்றை பொறுத்து, கிருமிகளின் எண்ணிக்கை, குறையவோ, கூடவோ செய்கிறது. தோலை விட உள்ளங்கை மற்றும் வாயின் உட்புறம் ஏராளமான நுண்கிருமிகள் இருப்பதால், இவற்றின் மூலம் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.



காட்டு ஏலக்காய், கிருமிகளை அழிக்க வல்லது. அமோமம் சபுலேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜி பெரேசியே குடும்பத்தைச் சார்ந்த செடிகளின் உலர்ந்த பழங்களே காட்டு ஏலக்காய். பெரிய ஏலக்காய் அல்லது பேரேலம் என்று அழைக்கப்படுகின்றது.

சால்கோன் என்ற கார்டோமோனின், அல்பினிட்டின், சபுலின் மற்றும் சினியோல் என்ற நறுமணமுள்ள மருந்துசத்து ஆகியன காணப்படுகின்றன.

இவை, வயிற்றில் வளரும் தேவையற்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, செரிமான சக்தியை தூண்டி, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்று வலியை நீக்குகின்றன.



காட்டு ஏலக்காய் - 20 கிராம், இலவங்கப்பட்டை - 20 கிராம், சிறுநாகப்பூ - 20 கிராம், சுக்கு - 20 கிராம், மிளகு - 20 கிராம், திப்பிலி - 20 கிராம், வாய்விடங்கம் - 20 கிராம், மல்லிவிதை - 20 கிராம், ஆகியவற்றை சுத்தம் செய்து, இளவறுப்பாக வறுத்து, இடித்து, பொடித்து, சலித்து, 120 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு ஏழு நாட்கள் சாப்பிட்டு வர, நுண்கிருமிகளால் ஏற்பட்ட பல்வேறு வகையான வயிற்று உபாதைகள் நீங்கும்.



மூலிகையில் சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு பொருள் உண்டா? அதனை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா?

ஸ்டீவியா என்றழைக்கப்படும் சீனித்துளசி குறைந்த ஆற்றல் கொண்ட சர்க்கரைக்கு மாற்று இனிப்பாகும். உணவில் இனிப்பு சுவை வேண்டும் என்று விரும்பும் சர்க்கரை நோயாளிகள் சீனிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதனால் ரத்த சர்க்கரையளவு அதிகரிக்காது.



டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், jeyavenkateshdr@yahoo.com



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us