PUBLISHED ON : பிப் 20, 2022

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று, பலரும் பலவித மூலிகைகளை பயன்படுத்தி கஷாயம் காய்ச்சி குடிக்கின்றனர். முறையாக பயிற்சி பெறாத நாட்டு மருத்துவர்கள் தரும் மூலிகை கஷாயத்தை குடித்து, வயிறு புண்ணாகி, ரத்த வாந்தி எடுப்பவர்களை பார்க்கிறோம். இது, கடந்த பல மாதங்களில் அதிகமாகி விட்டது. சிலர், ஒரு படி மேலே போய், உணவுக்கு மாற்றாக மூலிகைகளை சாப்பிடுகின்றனர்.
நாம் சமையலில் உபயோகிக்கும் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு போன்றவற்றை எந்த அளவு போட வேண்டுமோ, அந்த அளவு போட்டு, வேக வைத்து சாப்பிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், அதை அப்படியே பச்சையாக, அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதில் உள்ள காரத்தன்மை வயிற்றுப் புண்னை ஏற்படுத்தும்.
தவிர வயிற்று எரிச்சல், வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகளும் அதிகரித்து உள்ளன. 'ஹெச்பைலோரை' எனப்படும் பாக்டீரியா தொற்றால், வேறு ஏதேனும் உடல் பிரச்னைக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், இந்த இரண்டு காரணத்தால் தான் பொதுவான 'அல்சர்' எனப்படும் புண் ஏற்படும். நாட்டு மருந்தில், மூலிகை தவிர வேறு பல ரசாயன பொருட்கள் கலப்பதாக கூறுகின்றனர். இவற்றை, தகுதி பெறாத பலர் தயாரித்து விற்கின்றனர்.
இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து, அதனால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பும் அதிகரித்து உள்ளது. இந்தப் பிரச்னை, நம் நாட்டில் மட்டும் இல்லை; சீனா போன்ற நாடுகளிலும் உள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்று விடுகிறது. எந்த மருத்துவ முறையை பின்பற்றினாலும், தகுதி வாய்ந்த, முறையாக பயிற்சி பெற்ற டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
டாக்டர் ஆர்.ரவி,
இயக்குனர், குடல், இரைப்பை பிரிவு,
ரேலா மருத்துவமனை, சென்னை
