PUBLISHED ON : மார் 21, 2021

கர்ப்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, நாள் பட்ட சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். இது தவிர, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று, சிறுநீரக குழாயின் மேல் கட்டி அல்லது வேறு காரணங்களால் அழுத்தம் ஏற்படுவதும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும் காரணிகள்.
சிறுநீரகங்களில் வீக்கம் ஏற்பட்டு, சிகிச்சை செய்யாமல் விட்டால், அதுவும் நாள்பட்ட சிறுநீரகக் கோளறுகளை ஏற்படுத்தலாம். இதய கோளாறுகள், சிகரெட் பழக்கம், உடல் பருமன், மரபு ரீதியான காரணிகளாலும் சிறுநீரக கோளாறுகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் இருந்தால், கர்ப்பம் தரிப்பது சிரமம். அப்படியே கர்ப்பம் உண்டானாலும், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அதையும் மீறி, குழந்தை வளர்ந்தால், பிறக்கும் குழந்தையின் சிறுநீரகங்கள், முழுமையாக உருவாகாமல் இருக்கும்; குழந்தையும் முழுமையாக வளர்ச்சி அடையாமல் பிறக்கலாம். குறைப்பிரசவம் ஏற்படவும், தாய் - சேய் இருவருக்கும் ரத்த சோகை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
சிறுநீரகக் கோளாறு இருந்தால், முறையான சிகிச்சை செய்து, முழுமையாக சரி செய்த பின், கர்ப்பத்தை திட்டமிடுவது பாதுகாப்பானது. சிலருக்கு, கர்ப்பத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இது, நேரடியாக சிறுநீரகங்களை பாதித்து, நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும். கர்ப்பத்தின் கடைசி வாரங்களில், இது போன்ற பிரச்னை இருந்தால், பெரிய அளவில் சிறுநீரக பாதிப்பு வருவதல்லை.
முப்பது வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகமாகி விட்டது. இந்த வயதில் இயல்பாக கர்ப்பம் தரிக்க முடியாமல், செயற்கை கருத்தரிப்பை நாட வேண்டிய நிலை. இதில் இரட்டைக் கரு உருவானால், உயர் ரத்த அழுத்தமும் வரும். இதனாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை கோளாறால் சிறுநீரகங்கள் பாதிப்படைவதில்லை. குழந்தை பெற்ற பின், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம், பின்னாளில், சர்க்கரை கோளாறு வருவதற்கான வாய்ப்பு, 25 சதவீதம் உள்ளது.
டாக்டர் தீபா தங்கராஜமூர்த்தி,
மகளிர் நல சிறப்பு மருத்துவர்,
மகளிர் மையம்,
மதர்ஹூட் மருத்துவமனை, கோவை.
80672 38866, 97899 31970
