PUBLISHED ON : மார் 22, 2021

என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்கள், 'உடனடியாக எடை குறைய என்ன செய்யலாம்?' என்று கேட்பது வழக்கம். உணவு கட்டுப்பாடு இருந்தால், எடையை குறைத்து விடலாம் என்பது பொதுவான அபிப்ராயம். காலை முதல் இரவு வரை, என்ன சாப்பிட வேண்டும் என்று பட்டியல் போட்டு, அதன்படி சாப்பிட்டால், உடனே எடை குறைந்து விடும் என்று நினைப்பதும் தவறு.
உடல் எடை அதிகரிக்க, தைராய்டு, சர்க்கரை கோளாறு, கருக் குழாயில் ஏற்படும் நீர்க்கட்டிகள், சீரற்ற ஹார்மோன் செயல்பாடு என, பல காரணங்கள் உள்ளன.குறிப்பிட்ட நாட்களுக்குள், இவ்வளவு எடையை குறைத்துவிட வேண்டும் என்ற மனநிலையும் இருக்கக் கூடாது.மன அழுத்தம், சமச்சீரான உணவை நேரத்திற்கு சாப்பிடாமல், போதுமான துாக்கம் இல்லாமல் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும். பல வாரங்களாக, 'ஜிம்'மில் உடற்பயிற்சி செய்து, விட்டதும் உடல் எடை அதிகரித்து விட்டது என்று சொல்வதும் தவறு.
அவரவரின் உடல் தேவைக்கேற்ப, தகுந்த மருத்துவ ஆலோசனையுடன், உடல் எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்னை இருப்பவர்களின் எதிர்மறை எண்ணங்களை, நேர்மறையாக மாற்ற வேண்டும். அதேநேரம், ஆலோசனை சொல்லும் நிபுணர்களின் நேர்மறை ஆலோசனைகளை பின்பற்றும் மனநிலையும் வர வேண்டும். இப்படி, இரண்டும் நேர்கோட்டில் வரும் போது தான், எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் எதிர்பார்த்த, 'ரிசல்ட்'டை தந்து விட வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதில், எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த எட்டு மாதங்களாக, பித்தப்பை கற்கள் பிரச்னையால் வருபவர்களின் எண்ணிக்கை, அதிகமாகி உள்ளது. கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் என, தேவையான எல்லா சத்துக்களும் சமச்சீராக இருக்கும் உணவை சாப்பிட வேண்டும்.எடையை குறைப்பதற்காக, குறைந்த கலோரி உள்ள உணவை சாப்பிடும் போது, போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போகலாம்.
கொழுப்பை சக்தியாக மாற்றுவதற்கு, பித்த நீர் சுரக்க வேண்டும். கொழுப்பு சாப்பிடாமல் இருந்தால், சுரக்கும் பித்த நீர், பித்தப் பையில் கற்களாக மாற வாய்ப்பு உள்ளது.எடையை குறைக்க பொதுவான வழிமுறைகளை பின்பற்றுவதை விடவும், அவரவரின் உடல் தேவைக்கு ஏற்ப, முறையான ஆலோசனை பெற்று, அதை பின்பற்ற வேண்டும்.
டாக்டர் சுபா ரவி
யோகா தெரபி மற்றும் உணவு ஆலோசகர்
சஞ்சீவனம் ஆயுர்வேத மையம்,
சென்னை
9176602599
