PUBLISHED ON : நவ 29, 2020

குறட்டை விட்டு துாங்குவது நிம்மதியான, ஆழ்ந்த துாக்கம் கிடையாது.
துாக்கத்தில் ஏற்படக் கூடிய சுவாசக் கோளாறு இது. இந்தப் பிரச்னையை சரி செய்யாமல் விட்டால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு கோளாறு, இதயம் தொடர்பான பாதிப்புகள், பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
உறங்கும் நேரத்தில் தொண்டையின் தசைகள் தளர்ந்து ஓய்வெடுக்கும்; இதனால், சுவாசப் பாதையின் அளவு குறுகிடும். குறுகியிருக்கும் சுவாசப் பாதையில் காற்று போகும் போது, குறட்டை சத்தம் வெளிவரும்.
காரணங்கள்
உடல் பருமன், 'சைனஸ்' சம்பந்தப்பட்ட பிரச்னைகள், உள்நாக்கு அழற்சி, தைராய்டு கோளாறு, மூக்கடைப்பு, மூக்கின் தடுப்புச் சுவர் சற்று விலகி இருப்பது, மது, புகை பழக்கம், மரபியல் காரணிகள், சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் கூட குறட்டை ஏற்படலாம்.
தீர்வு
துாங்கும் போது மல்லாந்து படுப்பதை தவிர்க்கவும்; இடது பக்கம் ஒருக்களித்து படுப்பது நல்லது.
அதிக உயரமாக தலையணை வைத்துக் கொள்வது கூடாது.
உணவு முறை
உணவில் மஞ்சள், பூண்டு, சின்ன வெங்காயம், அன்னாசி பழம், மாதுளை, தக்காளி போன்றவற்றை சேர்க்க வேண்டியது அவசியம். தொற்று கிருமிகளை அழிக்கும் திறன், தேனுக்கு உள்ளது. இதனால், சுவாசக் குழாய், தொண்டையில் கிருமிகளால் ஏற்படும் கோளாறை சரி செய்து, குறட்டையை குறைக்க உதவும்.
சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு முன் துாங்கினால், குறட்டை சத்தம் வரும். இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இரவு உணவிற்கு பின், இரண்டு மணி நேரம் கழித்து துாங்கச் செல்லலாம்.
உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஒரு பல் பூண்டு, ஒரு சின்ன வெங்காயம் சேர்த்து இடித்து, கல்யாண முருங்கை இலை சாறு, துளசி சாறு, வெள்ளை மிளகு பொடி சேர்த்து நன்றாக கலந்து, உறங்குவதற்கு அரை மணி நேரம் முன் சாப்பிட்டு, வெந்நீர் குடித்து விட வேண்டும். தினமும் இது போல செய்தால், நாளடைவில் குறட்டை சத்தம் குறையும்.
கற்பூரவல்லி தைலம் மூன்று சொட்டுகள் எடுத்து, இதோடு சிறிது பச்சை கற்பூரம் கலந்து, சுவாசித்தால், நாளடைவில் குறட்டை சத்தம் குறையும்.
டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை.
drmythiliayur@gmail.com

