PUBLISHED ON : டிச 26, 2021

புற்றுநோய் கட்டி மார்பகங்களில் ஒரு கோலி குண்டு போல் தடையின்றி உருண்டால், அது ஆரம்பநிலை மார்பக புற்றுநோய். ஆரம்பநிலை புற்றுநோய் மார்புக் கூட்டு தசைகளில் ஊடுருவதில்லை. அதேபோல் முலைக் காம்பையோ, மார்பகங்களின் தோலையோ பாதிப்பதில்லை.
முற்றிய நிலையில் முலைக் காம்பை புண்ணாக்கி விடும். மார்பக தோலை பாதித்து, புண், சீழ் வடிதல், ரத்தம் கசிதல் போன்றவற்றை உண்டாக்கும். நெஞ்சு கூட்டு தசைகளில் ஊடுருவி கனமாக, அசைக்க முடியாத, கட்டிகள் போல் காணப்படும். மேலும் முதுகெலும்பு, கல்லீரல், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகளுக்கு பரவிவிடும்.
ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி?
மார்பக புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிவதற்கு மார்பக சுய பரிசோதனை முக்கியமானது.
இந்த மார்பக சுய பரிசோதனையை முறையாக பின்பற்றி வந்தால், புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்து, உறுதி செய்த பின் தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால், புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணம்அடையலாம்.
கண்ணாடி முன் நின்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு முலைக் காம்பையும் தடவாமல், மார்பகங்களின் கீழ்ப்பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது சிறிய குழி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
அதே போன்று, குளிக்கும் போது சோப்பை மார்பகங்களின் மேல் தேய்த்த பின், கைகளால் தொட்டுத் தடவி பார்த்து கட்டி ஏதும் இருக்கிறதா என்று பரிசோதித்து கொள்ள வேண்டும்.
மார்பகங்களை வலது புறமாகவும், இடது புறமாகவும் வட்ட வடிவத்தில் பரிசோதித்து பார்க்க வேண்டும். அவ்வாறு தொட்டு பார்க்கும் போது வலி இல்லாமல் சிறிய கட்டியாக இருந்தாலும், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம்.
பெரும்பாலும் ஆரம்பநிலை புற்றுநோய் கட்டிகள் வலி இல்லாமல் காணப்படும். எனவே, பெண்கள் கட்டாயம் இந்த சுய பரிசோதனையை வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்.
மூலிகைமணி க.வே.அஜிதா பொற்கொடி,
நோயியல் மருத்துவர், சென்னை
82201 44400
