PUBLISHED ON : ஜூன் 14, 2015

இன்று காற்று, தண்ணீரில் கலந்துள்ள அதிக மாசு காரணமாக, நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதியோர், குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளே இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி இவர்களின் உடலில் குறைந்து காணப்படுவதே இதற்கு காரணம்.
இதனால், நோய் தாக்காமல் குழந்தைகளின் நலனில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பில், ஒவ்வொரு பெற்றோரும் இருக்கின்றனர். இதில், பலவகையான படிநிலைகள் உள்ளன. ஒவ்வொரு படிநிலையிலும், குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியமானது. போட்டிகள் நிறைந்த உலகில், தனித்திறமை வாய்ந்தவர்களாக தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என எண்ணுவது, பெற்றோர்களது இயல்பு. அதே சமயம் அவர்களின் ஆரோக்கியம் காப்பது என்பதும் அவசியமானது. ஆரோக்கியம் இல்லை என்றால், எவ்வளவு தனித்
திறமை இருந்தாலும் பயனில்லை.
முன்னோர்கள் காலத்தில், குழந்தைகளை குளிப்பாட்டியதும், தலை ஈரத்தை காய வைப்பதற்காக, மூலிகைகள் அடங்கிய சாம்பிராணி புகை போட்டு வந்தனர். மூலிகைகள் என்பதால், அதன் சுவாசத்தை குழந்தைகள் நுகரும் போது, தீய சக்திகளின் சீண்டல் இல்லாமலும், சுத்தமான இயற்கை அடங்கிய சுவாசம் உடலை சென்றடையும். தற்போது, குழந்தைகளுக்கு, ரசாயன கலவையால் ஆன சாம்பிராணி புகையே, பெரும்பாலும் விற்கப்பட்டு வருகிறது. ஆகையால், குழந்தைகளை குளிப்பாட்டியதும் புகை போடாமல் இருப்பது அவசியம். ஏனெனில், குழந்தைகளின் நுரையீரல் மென்மையாக, சிறியதாக இருக்கும்.
அப்போது, இத்தகைய சுவாசம் உள்ளே செல்லும் போது, குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, வறட்டு இருமல், நாளடைவில் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்கும். இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க வேண்டும். அப்படியானால் குழந்தைகளை குளிப்பாட்டியதும், தலையின் ஈரத்தை காய வைக்க பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
* குளிப்பாட்டியதும், வெயிலிலோ அல்லது மின்விசிறியின் அடியிலோ வைத்து தலையின் ஈரத்தை உலர வைக்கலாம்.
* வெயில் இல்லாத சமயத்தில், குழந்தையின் தலையை உலர வைக்க, பவுடரை லேசாக பூசி விட வேண்டும். அதுவும், குழந்தைகளின் கண்ணுக்கும், மூக்குக்கும் பவுடர் பரவாதவாறு போட்டு விடுதல் முக்கியம்.
* முகத்துக்கு பவுடர் போடும் போதும், அவர்களின் முகத்தில் டப் டப் என அடித்து பூசாமல், பவுடரை தொட்டு எடுக்க வேண்டும். இல்லையெனில், பவுடர் துகள்கள் மூக்கிற்குள், சென்று மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இனிமேல், குளிப்பாட்டியதும், சாம்பிராணி புகையை போடாமல், இதனை பின்பற்றுங்கள். குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம்.
