PUBLISHED ON : ஜூன் 14, 2015

முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உள்சூடு, கண்நோய், பித்த மயக்கம் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து, வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பு வலிகள் பறந்து விடும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை, நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும்.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. காய்ச்சல், மூட்டு வலியை போக்க முருங்கைக்காய் சூப் நல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தை செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின், நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு öசாட்டு விட்டால், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகள் அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும், அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு, புதுப் பாண்டத்தில் வைத்திருந்து, காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால்
தாது கெட்டிப்படும். முருங்கை இலைச்சாறுடன் பால் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் ரத்த சுத்தி பெறும்; எலும்புகள் வலுப்பெறும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவா கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.
