PUBLISHED ON : நவ 10, 2024

மரபணு கோளாறுகளைத் தவிர, 80 - 90 சதவீதம் வரை உள்ள இதய நோய் தொடர்பான ஆபத்து காரணிகளைத் தவிர்த்தால், இதய நோய் ஆபத்தைத் தடுக்கலாம் என்று பிரபலமான 'இன்டர்ஹார்ட்' ஆய்வு கூறுகிறது.
நம் நாட்டில், பாரம்பரிய உணவு, வாழ்க்கை முறை பழக்கங்களை தவிர்த்து,விரைவான நகரமயமாதல், மேற்கத்திய உணவு, வாழ்க்கை முறையை பின்பற்றுவதால், இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.
நம் மரபணுவிற்கு நாள் முழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்வது தான் வழக்கம். இதற்கு நேர் மாறாக தற்போது ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழலும் உள்ளது.
பொருளாதாரம் வளராத நிலையில், நம் முன்னோர்கள் தொற்று நோய், பசி போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களை ஒப்பிடும் போது, செயற்கையான வாழ்க்கை முறைக்கு தற்போதைய தலைமுறை மாறியுள்ளது. இதனால், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
இத்துடன் முறையான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தமும் இளம் வயதினரிடம் அதிகமாக உள்ளது.
எனவே, நம் வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு வினாடியும் வேலை செய்ய சோர்வடையாத இதயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.
மற்ற உறுப்புகளைப் போல இல்லாமல், இதயம் எப்போதும் இயங்க வேண்டும். இதயம் ஆரோக்கியமாக இருக்க அமைதியான மனநிலையுடன் நமக்கு விருப்பமான செயல்களை ஈடுபாடுடன் செய்வது முக்கியம்.
தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில், உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பது குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் குறைவாக உள்ளது, இது, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. பெரும்பாலும் நம் வாழ்க்கை 'சும்மா இருக்கும் உடல் மற்றும் அலையும் மனம்' என்று மாறிவிட்டது, இது மாரடைப்புக்கான பொதுவான அடிப்படை. ஆரோக்கியமான இதயத்துடன் நீண்ட காலம் வாழ உடல் செயல்பாடுகளை அதிகரித்து, மனதை 'ரிலாக்ஸ்' ஆக வைக்க வேண்டிய நேரம் இது.
டாக்டர் குரு பிரசாத் சோகுனுரு,மூத்த இதய நோய் நிபுணர்,கிளெனீகல்ஸ் மருத்துவமனை, சென்னை79967 89196info.chn@gleneagleshospitals.co.in