நோய் எதிர்ப்பு சக்தி: நோய் எதிர்ப்பு சக்தியில் இரண்டு வகைகள்!
நோய் எதிர்ப்பு சக்தி: நோய் எதிர்ப்பு சக்தியில் இரண்டு வகைகள்!
PUBLISHED ON : டிச 22, 2020

நோய் எதிர்ப்பு சக்தியில், 'இன்டேட்' எனப்படும் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியால், வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் நம் உடலினுள் நுழைந்தால், அதை எவ்வித பிரச்னையும் இல்லாமல், அவற்றை வெளியேற்றி, உடம்பு தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும்.
அடுத்து, 'அடாப்டிவ்' எதிர்ப்பு சக்தி. உடம்பினுள் நுழைந்த குறிப்பிட்ட கிருமியை அழிக்க முற்படும்போது, அதற்கு வேண்டிய எதிர்ப்பணுக்களை, தானே உருவாக்கி கொள்ளும். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை.
எப்படி பெறுவது?
யோகா: வளர்சிதை மாற்றங்களை சீர்செய்ய, இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று நோய்க்கு எதிரான உடல், மன வலிமையை அதிகரிக்க, சமச்சீரான ஹார்மோன் செயல்பாட்டிற்கும், மன அழுத்தம் குறைய, பல விஷயங்களுக்கும் யோகா சிறந்ததாக உள்ளது.-
சூரிய வெளிச்சம்: இயற்கையான வெளிச்சம், உடம்பிற்கு சாவி போன்றது. சூரிய வெளிச்சம் உடலில் பட்டால் தான், உடலின் மற்ற செயல்கள் ஆரோக்கியமாக நடக்கும். எதிர்ப்பு சக்தியை நிலையாக வைத்திருக்க, 'ஆன்டி - ஆக்சிடென்ட்' உற்பத்திக்கு தேவையான, 'விட்டமின் - டி' கிடைப்பதற்கு ஒரே வழி சூரிய வெளிச்சம்.
போதிய அளவு விட்டமின் - டி இல்லாதவர்கள், சுவாச தொற்றுக்கு அதிகமாக ஆளாகிறோம். காசு கொடுத்து, சூரிய ஒளியை வாங்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. வீட்டை விட்டு வெளியில் வந்தாலே போதும். தினமும், 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தாலே போதுமானது; தேவையான எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும்.
தியானம்: தியானம் என்பதே மூச்சு பயிற்சி. பிறக்கும் போது, அழுதபடியே மூச்சை இழுக்கிறோம்; இறக்கும் போது, மூச்சை விடுகிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில், சுவாசம் இருக்கிறதா, இல்லையா, எப்படி மூச்சு விடுகிறோம் என்பதை கவனிப்பதே கிடையாது.
கவனத்துடன் ஆழமாக சுவாசித்தாலே, மனதில் இருக்கும் நாள்பட்ட மன அழுத்தம் படிப்படியாக சரியாகி விடும்.
எதிர்ப்பு சக்தியை குறைப்பதற்கு மன அழுத்தம் ஒன்றே போதும். ஒரு நிமிடம் மன அழுத்தத்திற்கு ஆளானால், அடுத்த இரண்டு மணி நேரம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான செயல்கள் உடலினுள் நடக்கும்.
மூச்சுப் பயிற்சி செய்தால், மன அழுத்தத்தை உண்டு பண்ணும், 'கார்ட்டிசால்' என்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து, 'என்டோபின்' ஹார்மோன் அதிகம் சுரந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் உண்டு பண்ணுகிறது.
டாக்டர் ஒய்.தீபா, தலைவர்,
இயற்கை மருத்துவத் துறை,
அரசு சித்தா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி,
அரும்பாக்கம், சென்னை. 99405 82500.

