PUBLISHED ON : ஜூன் 05, 2011

திட வடிவ கழிவுகளை மலமாகவும், திரவ வடிவ கழிவுகளை சிறுநீர் மற்றும் வியர்வையாகவும் வெளியேற்றுவது நமது உடலின் இயற்கை. காலையில் மலம் கழிப்பதன் மூலம், வயிறு மற்றும் குடல் சார்ந்த உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. அதேபோல் சிறுநீர் கழித்தல் மூலம் சிறுநீரகங்களும், குளிப்பதன் மூலம் தோலும், பல் துலக்குவதன் மூலம் வாய் மற்றும் பற்களும் சுத்தமடைகின்றன.
இவற்றை அன்றாடம் சுத்தம் செய்யாவிடில் பல நோய்களுக்கு முன்னோடியாகவும், பல நோய்கள் இருப்பது போன்ற பயத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. காலை கடமைகளை காலை கடன்கள் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. 'மும்மலம்; அறுநீர்' என்பது சித்தர்களின் வாக்கு. இயற்கை உணவுகளையே உட்கொண்ட, சித்தர் காலத்தில் மூன்று முறை மலம் கழித்தலும், ஆறு முறை சிறுநீர் கழித்தலும் வழக்கமாக இருந்தது.
ஆனால் வேகவைத்த, கொழுப்பான உணவுகளை அதிகம் உட்கொள்ளும் இந்த காலகட்டத்தில், ஒரு முறை மலம் செய்வதற்கே படாதபாடு பட வேண்டியுள்ளது. மாறிவரும் உணவு பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பின்மை, சாயம் சார்ந்த துரித உணவுகள், காலந்தவறி உண்பது, நார்ச்சத்து நிறைந்த கீரை, காய்கறி, பழங்களை தவிர்ப்பது, வேதிப்பொருட்கள் சார்ந்த மருந்துகளை அதிகம் உட்கொள்வது, சர்க்கரை நோய், இருதய நோய்,
ரத்தக்கொதிப்பு, தோல்நோய் போன்றவற்றாலும் உணவுப்பாதையில் வறட்சி ஏற்பட்டு, செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கல் உண்டாகிறது.
மலச்சிக்கலினால் புத்துணர்ச்சி குறைவதுடன், அன்றாட பணிகளிலும் சிக்கல் உண்டாகிறது. மலம் கழித்தலை
'பவ்வீ' என்றும் மலத்தை அடக்கினாலோ அல்லது மலம் சரியாக வெளியேறாவிட்டாலோ கடுமையான முழங்கால் வலி, சிறுநீர் பாதையில் தொற்று, அடிக்கடி சளி ஆகியன உண்டாகும் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உடலின் சூடு அதிகரித்து தலைவலி, மிக சத்தமான துர்நாற்றத்துடன் அபான வாயு பிரிதல், உடல் பலம் குன்றி, எடை அதிகமானது போன்ற உணர்வு ஆகியன உண்டாகும்.
மேலும் மலச்சிக்கலினால் அடிக்கடி கொட்டாவி, உண்ட உணவு செரிக்காமல் வயிறு ஊதியது போன்ற உணர்வு, தொப்புளுக்கு கீழ்ப்பட்ட பகுதிகள் மற்றும் தொடையில் வீங்கியது போன்ற அதைப்பு, காம இச்சை குறைதல், பசியின்மை, கண்களைச் சுற்றி கருவளையங்கள், ரத்த அழுத்தம் கூடுதல், சிறுநீரை கட்டுப்படுத்த இயலாமை, மூலம், பவுத்திரம், ஆசனவாயில் அரிப்பு, வெடிப்பு, காலையில் எழும்பொழுதே இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளில் வலி ஆகியன மலச்சிக்கலால் நமது உடலில் ஏற்படும் பலவித உபாதைகளாகும்.
எப்படிப்பட்ட மலச்சிக்கலாக இருந்தாலும் அதை நீக்கி, குடலில் மலம் தங்கவிடாமல் தடுத்து, காலையில் சுகமாக மலத்தை கழிக்கச் செய்யும் மூலிகை இரேவல்சின்னி.
ரீயம் எமோடி என்ற தாவரவியல் பெயர்கொண்ட பாலிகோனேசியே குடும்பத்தைச் சார்ந்த இரேவல்சின்னி செடிகளின் வேர் கிழங்குகளே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்தியன் ரூபார்ப் என்றும் நாட்டு இரேவல்சின்னி என்றும் அழைக்கப்படும் இதன் வேர் கிழங்குகளிலுள்ள ஆந்த்ரா குயினோன் கிளைக் கோ சைடுகள், கிறஸ்சோபேனின், ரேம்னோஸ், சென்னாசைடு ஏ மற்றும் பி, எமோடின் போன்ற பொருட்கள் மலக்குடலை தூண்டி, தேங்கிய மலத்தை இலகுவாக வெளியேற்றுகின்றன.
இரே வல்சின் னி - 5 கிராம், இசப்புகோல்-50 கிராம், நிலவாரை-30 கிராம், கடுக்காய்-15 கிராம் என்ற அளவில் எடுத்து, இடித்து, பொடித்து, சலித்து ஒன்று அல்லது இரண்டு கிராம் தினமும் இரவில் இளஞ்சூடான நீரில் கலந்து, குடித்துவர அதி காலையில் மலம் எளிதாக வெளியேறும். நாட்பட்ட மலச்சிக்கலும் நீங்கும். கடுமையான மலச்சிக்கல் உடையவர்கள் அரை கிராம் இரேவல் சின்னி பொடியை சூடான நீரில் கலந்து குடிக்க, மலம் கழிச்சலாக வெளியேறும். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் ரோஸ்லோ என்னும் பொடியில் இரேவல்சின்னி சேர்க்கப்படுகிறது.
இதனை 3 முதல் 5 கிராமளவு நீரில் கலந்து குடித்துவந்தாலும் மலச்சிக்கல் தீரும்.
கேள்வி - பதில்
எனக்கு சவ்வரிசி மிகவும் பிடிக்கும். இதை அடிக்கடி சாப்பிடலாமா?
சவ்வரிசிக்கு உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கும் தன்மை மற்றும் உடலை தேற்றும் தன்மை உண்டு. மெலிவான உடல்வாகு உடையவர்கள், சவ்வரிசியை வேகவைத்து உட்கொண்டு வரலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து தங்கும். ஆனால், அன்றாடம் சாப்பிட்டால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். மிகவும் குளிர்ச்சி உடையது என்பதால் மழைக்காலங்களில் உட்கொள்ள சளித்தொல்லையை அதிகரிக்கும்.
