PUBLISHED ON : ஜூன் 05, 2011
ஆய்வுக்கூட வசதியில்லாத முற்காலத்தில், சித்த மருத்துவர்கள் நோயை கண்டறிந்த விதமே சிறப்பானது. நோயாளியின் மலம், சிறுநீர், சீழ் போன்ற கழிவுப்பொருட்களை மூக்கால் நுகர்ந்தும், வியர்வை, சிறுநீர் போன்றவற்றை நாவால் சுவைத்தும், நோயை கண்டறிந்தனர்.
அத்துடன் கழிவுப் பொருட்களை காய்ச்சியோ அல்லது கழிவுப் பொருட்கள் உள்ள இடத்தில் மொய்க்கும் ஈ, எறும்பு போன்றவற்றை எண்ணியோ நோயை கணித்தனர். நோயாளியின் குடும்ப வரலாறு, வயது, மன உறுதி, வாழும் இடம், அங்கு தோன்றும் நோய்கள் போன்றவற்றை மருத்துவன் அறிந்திருப்பது அவசியம். ஆகவே சித்த மருத்துவர்கள் குடும்ப மருத்துவர்களாக இருந்தனர். நாக்கின் தன்மை, தோலின் நிறம், பேசும் தொனி, விழிகளில் மாற்றம், அவயங்களில் தொடு உணர்ச்சி, மலத்தின் நிறம், தன்மை, சிறுநீரின் நிறம், எண்ணிக்கை மற்றும் நோயாளியின் நாடி ஆகியவற்றைக் கொண்டு, நோயை அறிந்து, சிகிச்சை அளித்தனர்.
இதனால் அனுபவமிக்க வைத்தியர்களையே நோயாளிகள் நாடினர். ஆகையால் வயதில் முதிர்ந்த வைத்தியர்கள் கடவுளுக்கு இணையாக வணங்கப்பட்டனர்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
