வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை உள்ளதா?
வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை உள்ளதா?
PUBLISHED ON : ஆக 17, 2021

இந்த சந்தேகம் பல தரப்பினரிடமும் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வைரஸ் தொற்றால் ஏற்படும் அம்மை நோயை மஞ்சள், வேப்பிலை கொண்டு குணப்படுத்தி இருக்கின்றனர். இன்று வரையிலும் இந்த முறை நடைமுறையில் உள்ளது.
அதனால், சித்த மருத்துவர்களுக்கு தொற்று நோய் பற்றிய அறிவும், அதை குணப்படுத்தும் வழிமுறைகளும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதும் புதிதான விஷயமில்லை. வாத, பித்த, கப அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும் சித்த மருத்துவத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கும் தீர்வு காண முடியும். தொற்று ஏற்பட்ட சிலருக்கு காய்ச்சல் இருப்பதில்லை.
ஆனால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு உடல் வலி இருப்பதாக கூறுகின்றனர். இவர்களின் வாத பகுதியை வைரஸ் பாதிப்பால் உடல் வலியை ஏற்படுத்தி உள்ளது. சிலருக்கு உடலில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளது. இவர்களுக்கு பித்தத்தில் அதிகம் செயல்படுகிறது.
சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை கப ரீதியில் பாதிப்பை தந்துள்ளது. இந்த முறையில் பாதிப்புக்கு ஏற்ப மருந்துகள் கொடுத்து, எளிதாக தீர்வு பெற முடியும். தொற்று காலத்தில் என்ன மாதிரியான பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்?
காலையில் எழுந்ததும் வெந்நீரில் வாய் கொப்பளிப்பது, வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், கால் டீஸ்பூன் நெய், அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் துாள் கலந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம்.
இரவு துாங்குவதற்கு முன்னும் இன்னொரு முறை இதை சாப்பிடலாம். இது தொண்டை அழற்சியை சரி செய்யும்; தொண்டையின் உள் பக்கம் சீராக இயங்க மசகு போல செயல்படும். அவசியம் இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. அவசிய தேவைக்காக சென்று வந்ததும், மூக்கு, வாய், கை, கால்களை வெந்நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் குளிக்க வேண்டும் என்பதில்லை. காலை, மாலை இரு வேளை குளிக்க வேண்டும்.
வீட்டில் தானே இருக்கிறேன் என்று தாமதமாக எழுந்து, நேரம் தவறி சாப்பிடுவது தவறு. காலை 8:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 8:00 மணிக்கு முன், அந்தந்த வேளை உணவை சாப்பிட்டு, இரவு 10:30 மணிக்கு துாங்குவது, காலை 6:30 மணிக்கு எழுந்து, மிதமான உடற்பயிற்சி செய்து, உடம்பை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வந்து விட்டால், நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.
சத்தாக சாப்பிடுவேன்... ஆனாலும், இரவு 2:00 மணிக்கு மேல் தான் துாங்கப் போவேன் என்றால், உடம்பை அது பலவீனமாக்கி விடும்.
டாக்டர் மது கார்த்தீஷ்,
சித்த மருத்துவர், சென்னை
99944 93687
