PUBLISHED ON : அக் 31, 2021

கொரோனாவிற்கு முன் இருந்ததை விட, தற்போது அதிக அளவில் மன நலம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதை தினமும் பார்க்க முடிகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு அதற்கான சிகிச்சை மட்டும் இல்லாமல், மன நல ஆலோசனையும், ஆதரவும் சேர்த்தே தர வேண்டிய சூழல் உள்ளது.
இதற்கு முன் எந்த விதத்திலும் மனக் கோளாறுகள் இல்லாமல் இருந்தவர்களும், தற்போது ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தொற்று ஏற்படுத்திய உடல் ரீதியிலான பிரச்னைகளுடன், பணி, நெருங்கிய சொந்தங்கள், உறவினர்கள், குழந்தை, பெற்றோரை இழந்தது என்று ஏதாவது ஒரு வகையில் இழப்பை சந்தித்தவர்கள் ஏராளம்.
தவிர, பல மாதங்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருந்ததால், என்ன செய்வது என்ற குழப்பத்தில், மது, போதை பொருள் பழக்கமும் அதிகரித்து, தொற்றால் உடலளவில் ஏற்பட்ட பிரச்னைகளை விடவும், மனதளவில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளமாக உள்ளன.
கொரோனாவிற்கு முன் தினமும் நான்கு பேர் மனநல மருத்துவரிடம் வந்தால், அவர்களில் யாராவது ஒருவருக்கு மன நல பாதிப்பு இருக்கும்; சிகிச்சை தேவைப்படும். ஆனால் தற்போது நான்கு பேருக்கும், ஏதோ ஒரு மன நல பாதிப்பு உள்ளது; சிகிச்சையும் அவசியமாகிறது.
கண்டுபிடிப்பது எப்படி?
இறப்பு, இழப்பு ஏற்பட்டால் துக்கம் தாளாமல் அழுவது, மனத் துயரம், பாரமாக உணர்வது இயல்பான ஒன்று. இவை, நம்முடைய தினசரி வேலைகளை பாதிக்காமல் இருக்கும் வரை நாம் கவலைப்படத் தேவையில்லை. சாப்பிட முடிகிறது, துாக்கம் வருகிறது, தினசரி வேலைகளை செய்வதில் சிரமம் இல்லை என்றால் சிகிச்சை தேவையில்லை.
எந்த வேலையும் செய்ய முடியாமல் துாங்க முடியவில்லை; சாப்பிடத் தோன்றவில்லை; எதிர்மறை, தற்கொலை எண்ணம் வருகிறது. படபடப்பு, பதற்றம் அதிகம் இருந்து, இயல்பாக எதையும் செய்ய முடியாத போது, மனநல மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
மருந்து, மாத்திரைகள் அவசியம் இல்லை; ஆலோசனை மட்டும் போதும் என்றால், மனநல ஆலோசகரிடம் செல்ல, டாக்டர் சிபாரிசு செய்வார். முதலில் ஆலோசகரிடம் சென்று, அவரால் மருத்துவ ரீதியிலான பிரச்னைகளை அடையாளம் காண முடியாமல் போனால், சிகிச்சை தாமதமாகலாம்; பிரச்னையும் தீவிரமாகலாம்.
மன நல கோளாறுகளுக்கு நீண்ட நாட்கள் மருந்து சாப்பிட வேண்டியது இருக்கும். மன கோளாறு என்றாலே வன்முறையாக நடந்து கொள்வர், தீவிர மன நோய் என்று சினிமாவைப் பார்த்து தவறாக புரிந்து கொள்கிறோம்.
இதற்கு நீண்ட நாட்கள் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை; உடல் பருமன் ஏற்படாது; கரு தரிப்பதில் சிக்கல் இருக்காது. முறையாக சிகிச்சை எடுத்தால், குறைந்த நாட்களில் பூரணமாக குணம் பெறலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு, என்ன விதமான மன நோய்களை ஏற்படுத்தி இருக்கிறது; எவ்வளவு பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடக்கின்றன.
கொரோனாவிற்கு பின் உள்ள மனநல கோளாறுகள் குறித்த 'ப்ளோ அப்' தற்போது நடப்பதால், விபரங்கள் தெரிய இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.
டாக்டர் சி. பிரார்த்தனா சரஸ்வதி,
மன நல மருத்துவர்,
ரேலா மருத்துவமனை, சென்னை
044 - 6666 7777
