தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/காமாலை: கண்டறிந்து குணப்படுத்தலாம்!

காமாலை: கண்டறிந்து குணப்படுத்தலாம்!

காமாலை: கண்டறிந்து குணப்படுத்தலாம்!


PUBLISHED ON : செப் 02, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

வாயுவும், பித்தமும் சேர்ந்து, சீற்றமடைந்த காமாலைக்கு, 'ஹரீமகம்' என்று பெயர். இந்த நோய்க்கு உகந்த சிகிச்சை சரிவர அளிக்கப்படாமல், நோய், உடலிலேயே தங்கி விட்டால், உடல் உறுப்புகள் கடினமாகி, இந்த நோயை குணப்படுத்துவதும் கடினமாகி விடும்.

திருச்சியில், மஞ்சள் காமாலை நோய் பரவியுள்ளதாகவும், தடுப்பூசி போட்டும், குழந்தைகளை இந்நோய் தாக்கியுள்ளதாகவும், இதனால், பயந்த மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்து, வேறிடம் சென்றுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனை ஒருநாள் நடத்திய இலவசப் பரிசோதனையில் மட்டும், 448 மக்களை காமாலை (Hepatitis B&C) தாக்கியுள்ளது என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும், இதற்குள்ள மருந்துகள், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, 2 - 3 ஆண்டுகள் எடுக்க வேண்டும் என்றும், மேலும், இந்த மருந்துகளுக்கு பக்க விளைவுகள் கடுமையாக இருப்பதால், முதல் இரண்டு நாட்கள், அவர்களை மருத்துவமனையில் தங்க வைத்து, மருந்து வினியோகம் செய்து, பக்கவிளைவுகளைக் கண்காணித்த பின், வீட்டுக்கு அனுப்புவதாகவும் கூறப்பட்டது.

இந்தியாவில், காமாலை நோய்க்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆயுர்வேத - சித்த மருந்துகளால், சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, மக்கள் குணமடைவது உலகறிந்த உண்மை. ஆங்கில மருத்துவத்தில், 'ஹெபடைடிஸ்' அல்லது 'ஜாண்டிஸ்' என்ற பெயர்களால், மஞ்சள் காமாலை அழைக்கப்படுகிறது. உடலில் எரிச்சல், அஜீரணம், உடல் தளர்ச்சி, உணவில் விருப்பமின்மை, வயிற்றுக் குமட்டல், வாந்தி, ஜுரம் ஆகியவை, இந்த நோயின் அறிகுறிகள். முக்கியமாக, நோயாளிக்கு, பசியின்மையும், வயிற்றுக் குமட்டலும் காணப்படும். உடலில் சீற்றமடைந்த பித்தம், உடலெங்கும் பரவி, கண்கள், தோல், நகங்கள், முகம் யாவற்றையும், மஞ்சள் நிறமாக மாற்றி விடும். மலமும், சிறுநீரும், சிவப்புக் கலந்த மஞ்சளாகத் தோற்றமளிக்கும். இந்த நோய், ஏன் நம் மக்களை அதிகமாகத் தாக்குகிறது என்ற கேள்வி எழலாம். நம் மக்கள், ஏராளமாக ரத்த சோகையால் அவதிப்படுகின்றனர். ரத்த சோகை உள்ள நோயாளிகளை, காமாலை நோய் வெகு எளிதில் தாக்கும். உதாரணமாக, ரத்த சோகை பிடித்த ஒருவர், பித்தத்தைச் சீற்றமடையச் செய்யும் உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தால், சீற்றமடைந்த பித்தம், ரத்தம், தசைகள் இவைகளை எரித்து, உடலெங்கும் பரவி, மஞ்சள் நிறத்துடன் காமாலை நோயை உண்டாக்கும். இதை தவிர, உடலுக்கு கெடுதலை விளைவிக்கும், தீக்ஷணமான, உஷ்ணமான குணங்களை உடைய உணவுகள், சாராயம் போன்றவை, மருந்துகளின் பக்கவிளைவு இவையாவும், காமாலை நோய்க்கு காரணங்கள்.

காமாலை நோயில் பலவகைகள் உள்ளன. நோயாளி வெள்ளை நிறத்தில் மலம் கழிப்பது, கண்கள், சிறுநீர், தோல் இவைகளில் மஞ்சள் நிறம், அடிவயிற்றிலும், இதயப் பகுதியிலும் பாரம், வயிற்றில்,'குறுகுறு' என்ற ஓசை ஆகியவை தோன்றினால், பித்தத்தின் பாதை, கபத்தால் அடைக்கப்பட்டு தோன்றிய காமாலை என்று கணித்து, அதற்குள்ள சிகிச்சை அளிக்கப்படும். வாயுவும், பித்தமும் சேர்ந்து, சீற்றமடைந்த காமாலைக்கு, 'ஹரீமகம்' என்று பெயர். இந்த நோய்க்கு உகந்த சிகிச்சை சரிவர அளிக்கப்படாமல், நோய், உடலிலேயே தங்கி விட்டால், உடல் உறுப்புகள் கடினமாகி, இந்த நோயை குணப்படுத்துவதும் கடினமாகி விடும்.

காமாலை நோய், நீண்ட நாட்கள் உடலில் தங்கினால், மலமும், சிறுநீரும், கருத்த மஞ்சள் நிறமாக வெளிவரும். உடலில் அதிக வீக்கம் தோன்றும். வாய், கண்கள், மலம், சிறுநீர் இவற்றில் ரத்தம் கலந்து வரும். உணவில், ருசியின்மை, உடலில் எரிச்சல், மயக்கம், தாகம், மலச்சிக்கல், தலைச்சுற்றல், சோர்வு, மனக்கோளாறு, ஜீரண சக்தி முற்றிலும் குன்றி விடுதல் ஆகிய அறிகுறிகள் தோன்றி, உயிரையே பாதிக்கும்.

காமாலை நோய்க்கு, ஆயுர்வேத - சித்த மருத்துவத்தில், சிறந்த சிகிச்சைகள் உள்ளன. இந்த நோய், உடலை முழுமையாகத் தாக்கு முன்னரே, உடலின் பசியின்மை, குமட்டல் போன்ற அறிகுறிகளையும், நோயாளியின் உணவுப் பழக்க வழக்கங்களையும் வைத்து, நோய் வருமுன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

காமாலை நோய்க்கு முக்கியமான சிகிச்சை என்பது, பத்திய உணவு. பித்தத்தின் சீற்றத்தைத் தணிக்கும் எல்லா உணவுகளும், காமாலைக்கு உகந்த உணவுகள். உப்பு, புளிப்பு, காரம், உடலுக்கு உஷ்ணமான உணவு, ஜீரணத்திற்கு கடுமையான உணவு யாவும், காமாலை வியாதியில் தவிர்க்க வேண்டிய உணவுகள். காமாலை நோய்க்கு கஷாயங்கள், சூரணங்கள், பஸ்மங்கள், நெய் மருந்துகள், லேகியங்கள் என, பல்வேறு விதங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. காமாலை நோயாளிக்கு மருந்து அளிக்கும் முன், பேதி செய்யப்பட்டு, பித்தத்தின் சீற்றத்தை குறைத்து, சிகிச்சை துவங்கும். காமாலை நோயைக் குணப்படுத்த அனேக மூலிகை மருந்துகள், நம் கிராமப் பகுதிகளில் காணலாம். தமிழகத்தில் இந்த நோய்க்கு, கீழா நெல்லி மூலிகை பழக்கத்தில் இருந்து வருகிறது. அதிமதுரம், உலர்ந்த திராட்சை, சீந்தில் கொடி, ஆடாதோடை போன்ற மூலிகைகளைக் கொண்ட கஷாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, உலோகம் என்றும் இரும்பு கலந்த சேர்க்கை மருந்துகள் மிகவும் சிறந்தவை. இவ்வாறு காமாலை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆயுர்வேத - சித்த மருத்துவம் சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது.

டாக்டர் பி.எல்.டி., கிரிஜா

சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்

63, காமராஜ் அவென்யு முதல் தெரு,

அடையாறு, செ ன்னை - 20.

sanjeevanifoundation@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us