PUBLISHED ON : ஜூன் 24, 2021

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை எப்போது வரும் என கணிக்க முடியாவிட்டாலும், எப்போது வந்தாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்று பல்வேறு தரப்பினரும் கணிக்கின்றனர். அப்படி குழந்தைகளை பாதிக்கும் போது, 'மல்டி சிஸ்டம் இன்பிளமேட்ரி சிண்ட்ரோம்' எனப்படும், ஒரே நேரத்தில் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கண்கள் என, பல்வேறு உறுப்புகளையும் செயலிழக்கச் செய்யும். இவை தொற்றுக்கு பின் ஏற்படும் பக்க விளைவுகள்.
முதல் அலையில் முதியவர்கள், இரண்டாம் அலையில் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட போது, இதே பிரச்னைகள் ஏற்பட்டன.
மூன்றாவது அலையில் நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என பல்வேறு கணிப்புகள் கூறுகின்றன.
உடல் பருமன், ஆஸ்துமா கோளாறு, கேன்சர் பாதிப்பு, இதய கோளாறு உட்பட, நீண்ட கால உடல் பிரச்னை உள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை வைரஸ் தொற்று பாதிக்கும் அபாயம் அதிகம்.
முதல் இரண்டு கொரோனா அலைகளிலும் தொற்று பாதித்த குழந்தைகளை வைத்துப் பார்த்தால், இரண்டிலும் பாதிப்பின் தன்மையில் வேறுபாடு இல்லை. மிகக் குறைந்த சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே அவசர சிகிச்சை தேவைப்பட்டது.
ஊட்டச்சத்து மிக்க உணவும், உடற்பயிற்சியும் குழந்தைகளை தொற்றில் இருந்து பாதுகாக்கும்.
உடல் பருமன், வழக்கமான அட்டவணைப்படி தடுப்பூசிகளை போடாதது, தேவையான நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்யாமல் விடுவது, சர்க்கரை கோளாறு கட்டுக்குள் இல்லாதது போன்றவை தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
மூன்றாவது அலையின் தாக்கத்தை குறைக்க…
தற்போதுள்ள நடைமுறையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது, குழந்தைகளுக்கு தொற்றை பரப்பாமல் இருக்க உதவும்.
எல்லா மருத்துவ மையங்களிலும் முழு மருத்துவ வசதியுடன் குழந்தைகள் சிகிச்சை பிரிவும் தயாராக இருப்பது அவசியம்.
பச்சிளம் குழந்தைகள் உட்பட, குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் வழக்கமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பல்லுறுப்பு செயலிழப்பு அறிகுறிகள்
ஒரு நாளுக்கு மேல், தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் வலி, தோலில் தடுப்பு, வழக்கத்திற்கு மாறாக சோர்வு, அதிக இதய துடிப்பு, சுவாசிக்க சிரமம், கண்கள் சிவத்தல், உதடு, நாக்கு, கை, பாதங்கள் தடித்து சிவந்து இருப்பது, தலைவலி, மயக்கம், மூட்டுகளில் வீக்கம்.
அவசர சிகிச்சை அறிகுறிகள்
தீவிர வயிற்று வலி, சுவாசிக்க சிரமம், எழுந்திருக்க சிரமம்.
அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பில் இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடி மருத்துவ உதவி தேவை.
முதல் அலையை விட இரண்டாவது அலையில் குழந்தைகள் பாதிப்பு அதிகம்.
மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், 90 சதவீதம் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
தீவிரமாக பாதிக்கப்படும் குறைந்த சதவீத குழந்தைகளும் முழுமையாக குணம்பெற்று விடுவார்கள் என்பதே குழந்தைகள் நல மருத்துவர்களின் நம்பிக்கை.
டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன்,
இயக்குனர்,
சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை,
சென்னை

