PUBLISHED ON : ஜூன் 27, 2021

கொரோனா சிகிச்சையில், பயன்படுத்தும் பலவகையான ஸ்டிராய்டு மருந்துகள், ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது, அதுபோன்று, அல்சர், வாயு தொல்லை, அதிக அமில சுரப்பு போன்ற செரிமான பிரச்னைகளையும் அதிகமாக்கி விடும்.
வைரஸ் தொற்றில் இருந்து வெளிவந்த பின், அடுத்த பல வாரங்களுக்கு தொடர் இருமல் பலருக்கு இருக்கிறது. இருமல் என்றாலே நுரையீரல், சுவாசம் தொடர்பான பிரச்னை என்று நினைத்து இருமல் மருந்து, மாத்திரை என்று சாப்பிடுகின்றனர்.
ஜீரண கோளாறு இருப்பவர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமான பின், இருமல் இருந்தால் அது, வயிற்றுப் புண் பாதிப்பால் ஏற்பட்டதாக இருக்கலாம். சிகிச்சையின் போது தரப்பட்ட ஸ்டிராய்டு மருந்துகள் ஏற்கனவே இருந்த அல்சர், வாயு தொல்லையை இன்னும் அதிகப்படுத்தி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிகிச்சை முடிந்து தொற்றில் இருந்து வெளி வந்ததும், சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். குறைந்தது தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். திரவ உணவு மட்டும் எடுத்துக் கொள்ளாமல், திட உணவும் சாப்பிட வேண்டும்.
கொரோனா பாதிப்பிற்கு முன், அல்சர் வாயு தொல்லைக்கு சாப்பிட்ட மருந்துகளை, டாக்டரிடம் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும். அல்சருக்கு தரும் மருந்துடன் இருமலுக்கும் சேர்த்து மருந்து கொடுத்தால், சில நாட்களிலேயே சரியாகி விடுகிறது.
தொற்று சிகிச்சையின் போது, உடலின் உள் உறுப்பு செயல்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். அழிக்கப்பட்ட வைரஸ், ஸ்டிராய்டு மருந்துகள் ஏற்படுத்திய நச்சு கழிவுகள் போன்றவை, நுரையீரலில் கழிவுகளாக தங்கி, வீக்கத்தை ஏற்படுத்தி விடும்.
இவற்றை வெளியேற்ற உடம்பு முயற்சிக்கும். இதன் அறிகுறி இருமல். ஜீரண கோளாறுகள் இல்லாதவர்கள், மிதமான அளவில் இருமல் இருந்து, சமாளிக்க முடியாத பட்சத்தில், மருந்துகள் சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.
தீவிர இருமல் இருந்தால், இருமலை முழுமையாக சரி செய்ய மருந்துகள் தருவதை விட, அதன் தாக்கத்தை குறைக்க மட்டும் மருந்து சாப்பிடலாம். அதிக கெட்டியான சளி இருந்தால், அதை இலகுவாக்கி வெளியேற்ற அதற்கான மருந்து தர வேண்டும். அப்போதுதான் கழிவுகள் இருமல் மூலம் வெளியேறும்.
ஆவி பிடித்தால், சளியுடன் சேர்ந்து இருக்கும் பெரிய துகள்கள் உடைந்து, சிறிய துகள்களாக வெளியேற உதவும்.
டாக்டர் தீபக் கண்ணா,
சுவாச கோளாறுகள் மருத்துவ ஆலோசகர்,
சென்னை
drpulmomd@gmail.com

