குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - அரிசியை குற்றம் சொல்வது சரியில்லை!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - அரிசியை குற்றம் சொல்வது சரியில்லை!
PUBLISHED ON : ஏப் 21, 2019

குறிப்பிட்ட உணவுப் பழக்கம், உடற்பயிற்சியால், ஒருவரின் உடல் எடை குறைந்தால், மற்றவர்களும் அதையே பின்பற்றுவது இயல்பு. ஆனால், பலன் ஒரே மாதிரியாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
ஒவ்வொருவரின் உடல் அமைப்பும், உணவுத் தேவையும் மாறுபட்டது. இட்லி, சாம்பார், ரசம், சாதம், பொரியல் என்று நம் பாரம்பரிய உணவுகள், சாப்பிடும் முறை, மிக சிறந்தது. இதைப் பின்பற்றினால், அவசியம் இல்லாமல் எடை அதிகரிக்காது.
உலகிலேயே மிகவும் ஒல்லியாக இருக்கும் சீனர்களும், ஜப்பானியர்களும், மூன்று வேளையும், அரிசி உணவு சாப்பிடுகின்றனர். நல்ல கார்போஹைட்ரேட் இருக்கும் அரிசி உணவை சாப்பிடுவது தவறில்லை. எவ்வளவு, எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
வறுத்த, பொரித்த, துரித உணவுகள், சர்க்கரை, மைதா, உப்பு, சாப்பிடுவதாலேயே, எடை அதிகரிக்கிறது. உடல் பருமனாக இருப்பது, உடலின் உள் செயல்பாடுகளை பாதிக்கும்; ஹார்மோன்கள் சுரப்பதில், சமச்சீரற்ற தன்மை இருக்கும்; மலட்டுத் தன்மை ஏற்படும்.
'ஜிம்'மில் உடற்பயிற்சி செய்த வரை, எடை அதிகரிக்கவில்லை என்று சொல்பவர்கள் உண்டு. உடற்பயிற்சி செய்யும் போது சாப்பிட்ட, அதே அளவு கலோரியை, உடற்பயிற்சியை விட்ட பின்னும் சாப்பிடுவதால் வரும் பிரச்னை இது.
டாக்டர் அஸ்வின் விஜய், பொது மருத்துவர்,
மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், சென்னை.
