தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பெண்களே... உங்கள் உடல் நலத்தையும் பாருங்க!

பெண்களே... உங்கள் உடல் நலத்தையும் பாருங்க!

பெண்களே... உங்கள் உடல் நலத்தையும் பாருங்க!


PUBLISHED ON : மார் 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்களுக்கு இணையாக, பெண்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்ற பின், இந்த அபாயம் அதிகமாக உள்ளது.

எங்களிடம் வரும் இதய நோயாளிகளில், 80 சதவீதம் பேர் ஆண்கள். வெறும், 20 சதவீதம் பேர் தான் பெண்கள். இதனால், பெண்களுக்கு உடல் பிரச்னைகளே இல்லை என, எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும்பாலான பெண்கள், தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்வதில்லை; பரிசோதனைகளும் செய்து கொள்வதில்லை.

தேவையான போது அல்லது குறிப்பிட்ட வயதிற்கு மேல், ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வருவதில்லை.உடலில் கோளாறுகளுக்கான அறிகுறிகள் தெரிந்தாலும், மகனுக்கு, மகளுக்கு தேர்வு நேரம், அலுவலக வேலையாக கணவர் வெளியூர் சென்றிருக்கிறார் என, ஏதோ ஒரு காரணம் சொல்லி, அறிகுறிகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அலட்சியம்



பல ஆண்டுகளாக, உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்கும். அதனால், தலைவலி, சிறிது துாரம் நடந்தாலும் சுவாசிப்பதில் சிரமம் எல்லாம் இருக்கும். ஆனால், அருகில் உள்ள டாக்டரிடம் சென்று, ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கலாம் என்ற எண்ணம் வருவதில்லை. நெஞ்சில் வலி வந்தாலும், ஏதோ வாயுத் தொல்லை என்று, அறிகுறிகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர். பிரச்னை தீவிரமான பின் வருகின்றனர்.

தங்களின் கணவருக்கோ, குழந்தைக்கோ, உடலில் சிறிய மாற்றம், அறிகுறி தெரிந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருவதைப் போன்று, தங்கள் பிரச்னையில் கவனம் செலுத்துவதில்லை. மனைவியாக, சகோதரியாக, தாயாக, குடும்பத்தில் பல பொறுப்புகளை சுமக்கும் முக்கியமான நபர் பெண். பெண் இல்லாவிட்டால், குடும்பம் நிலையாக இருக்காது. பரிசோதனைக்கு வரும், 100 ஆண்களில், வெறும் நான்கு பேர் மட்டுமே, தங்களின் மனைவி அல்லது தாய்க்காக வந்திருப்பர். பல மருத்துவமனைகளில், பெண்களுக்கென பிரத்யேக பரிசோதனைகளை, குறைந்த கட்டணத்தில் செய்கின்றனர். அவற்றை, பெண்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல நேரங்களில், வாயுத் தொல்லையும், இதய கோளாறுகளால் ஏற்படும் அறிகுறிகளையும், வேறுபடுத்திப் பார்ப்பது சிரமம். வாயுத் தொல்லையால் வரும் அறிகுறிகள், உயிருக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாக இருக்கிறது; சில நிமிடங்கள் நடந்தால் குறைந்து விடுகிறது என்றால், பிரச்னை இல்லை. ஆனால், அறிகுறிகள் அதிகமாகிறது என்றால், உடனடியாக டாக்டரிடம் வருவது பாதுகாப்பானது.

அபாயம்



இதயத்தின் பின் பக்கத்தில் வலி வந்தால், பொதுவான மாரடைப்பு அறிகுறிகள் போல இல்லாமல், வாயுத் தொல்லை போன்றே இருக்கும்.சாப்பிட்ட பின், சிறிது துாரம் நடந்தால் வலி வருகிறது; சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், வாயு பிரச்னையாக இருக்கும் என, நினைக்கக் கூடாது. ஈ.சி.ஜி., பரிசோதனையில், எந்த மாறுபாடும் இல்லை எனில், வாயு பிரச்னைக்கான மாத்திரை எடுத்துக் கொண்டு, வழக்கமான வேலைகளை தொடரலாம்.

ஒரு வேளை மாரடைப்பாக இருந்து, அலட்சியம் செய்வதால், அடுத்த நாள் அதிக வலி வரும் போது, டாக்டரிடம் வந்தால், இடைப்பட்ட இந்த நேரத்தில், இதய நரம்புகள் அடைபட்டு, தசைகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.

இதயத்தின் செல்களுக்கு, அதிகபட்சம், 20 நிமிடங்களுக்கு மேல் ரத்தம் போகாமல் இருந்தால், இதய செல்கள் செயலிழந்து விடலாம். பெண்கள், தங்களின், 30வது வயது துவக்கத்தில், முழு உடல் பரிசோதனையை, ஒரு முறை செய்ய வேண்டும். பிரச்னை இல்லாத பட்சத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை,பரிசோதனை செய்யலாம். பிரச்னை இருந்தால், டாக்டர் என்ன ஆலோசனை சொல்கிறாறோ, அதற்கு ஏற்ப செய்து கொள்ளலாம். 40 வயதிற்கு மேல், ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதிப்பது நல்லது.

மெனோபாசிற்கு பின், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, உடல் பருமன் என்று, பல உடல் கோளாறுகள் ஏற்படலாம். தனிமையில் இருந்தால், மன அழுத்தம் வரலாம்.மாரடைப்பு போலவே, நெஞ்சு வலி வரும் நிறைய பெண்களைப் பார்க்கிறோம். சுவாசிப்பதற்கே சிரமப்பட்டு வருவர். ஈ.சி.ஜி., எடுத்துப் பார்த்தால், மாரடைப்பிற்கான அறிகுறிகள் இருக்கும்.

ஆஞ்சியோகிராம் எடுத்தால், இதய ரத்த நாளத்தில், ஓர் அடைப்பு கூட இருக்காது. இதற்கு காரணம், மன அழுத்தம். இதற்கு, 'ஸ்ட்ரெஸ் கார்டி யோமயோபதி' அல்லது'புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்' எனும் உடைந்த இதயம் என சொல்வோம். இது, ஆண்களை விடவும் பெண்களுக்கு வரும் பொதுவான பிரச்னை.

நெருங்கிய சொந்தங்களின் இறப்பு, கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு, காதல் தோல்வி, உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்னை என, பலவிதங்களிலும் இந்த மன அழுத்தம் பெண்களுக்கு வருகிறது. அலுவலகங்களில், பெரிய பொறுப்புகளில் இருக்கும் போது, இயல்பாகவே ஏற்படும் மன அழுத்தத்தினாலும் இது வரலாம். ஆண் இதயத்தையும், பெண் இதயத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், மன அழுத்தத்திற்கு ஈடுகொடுக்கும் தசைகளின் வலிமை, பெண்களுக்கு சற்று குறைவாகவே உள்ளது.

உடற்பயிற்சி



உணர்வுபூர்வமான எந்த விஷயம் பாதித்தாலும், ரத்தத்தில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் என்று சொல்லப்படும், 'அட்ரினலின்' அதிகமாக சுரந்து, ரத்தத்தில் கலந்து, இதய தசைகளை செயலிழக்க செய்கிறது. இதனால், இதய துடிப்பின் திறன் குறைந்து, தசைகள் பலவீனமாகின்றன; சுவாசப்பதில் சிரமம், மார்பு பகுதியில் வலி வரும். உடனடியாக சிகிச்சை செய்தால், மாத்திரை உதவியுடனேயே, சில வாரங்களில், தசைகளை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

அதீத மன அழுத்தத்தால், இதுபோன்ற பிரச்னை ஒரு முறை வந்தால், எப்பொழுதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுமோ, அந்த சமங்களில் எல்லாம், இதுபோன்று வர வாய்ப்பு உள்ளது. நாற்பது வயதிற்கு மேல், ஏதாவது ஒரு விஷயம், உணர்வுபூர்வமாக தன்னை பாதித்து, அதனால், மார்பில் வலி, படபடப்பு, மூச்சுத் திணறல் வந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.தினமும், 30 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்தால், மன அழுத்தம் குறைவதோடு, பல உடல் கோளாறுகள் வராமல் தடுக்கலாம். ஆரம்பத்தில் வரும் அறிகுறிகளை, அலட்சியம் செய்யவே கூடாது.

ராஜேஷ்வரி நாயக்

இதய நோய் மருத்துவர்,

அப்பல்லோ மருத்துவமனை,

சென்னை

044 - 2829 6753

drrajeshwari2006@yahoo.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us