PUBLISHED ON : மே 22, 2022

கோடைக் காலம் என்ற வார்த்தையை கேட்டதும் நினைவுக்கு வருவது வெயிலும், அதனால் ஏற்படும் உஷ்ணமும் தான். ஆனால், கோடைக் காலம் பல விதமான நல்ல விஷயங்களை, நம் வாழ்வுக்கு அளிக்கிறது; உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை நமக்குள் புகுத்துகிறது.
கோடைக் காலத்தில் தான், நம் உடல் மற்ற நேரத்தை விட உறுதியாக இருக்கும். உடற்பயிற்சி, மலையேற்றம் மற்றும் பல வெளிப்புற செயல்களுக்கு, கோடைக்காலம் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிகமாக வியர்ப்பதால், உடலில் இருந்து நீர் அதிகமாக வெளியேறும்; இதை சமன் செய்ய அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் குடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால், உடல் தானாக சுத்திகரிக்கப்படுகிறது.
மண் பாத்திரங்களை உபயோகிப்பது உடலுக்கு குளிர்ச்சி மட்டு மல்லாது, ஆரோக்கியமானதும் கூட. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட, 'ஏசி' அறையினுள் இருப்பதை மக்கள் விரும்புகின்றனர்.
அவ்வாறு இல்லாமல், அறையை காற்றோட்டத்துடன் வைத்துக் கொள்வதும், மர நிழலில் அமர்வதும் உடலுக்கு நல்லது. பருத்தி ஆடைகளை அணிவது சருமத்திற்கு நல்லது. நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மழைக் காலம், குளிர் காலத்தில் வரும் தொண்டை, மூக்கு, சுவாசக்குழாய், 'சைனஸ்' சம்பந்தமான உபாதைகள் நீங்கி, சுவாசம் சீராக இருக்கும். நம்மை அறியாமலேயே கோடையில் நம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
வரம் தரும் இயற்கை
நமக்கு எந்த காலத்தில் என்ன தேவை என்பதை, தானாகவே வாரி வழங்குகிறது இயற்கை. கோடைக் காலம் துவங்கியதை உணர்த்துவது வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்களின் அணிவகுப்பு, பழங்களின் அரசனான மாம்பழமும் கோடையில் கிடைக்கும்.
உடலின் குளிர்ச்சிக்கு தேவையான பூசணிக்காய், சுரைக்காய் போன்றவை அதிகம் கிடைக்கும். எண்ணெய் பதார்த்தங்கள், செயற்கை உணவுகளை தவிர்த்து, இயற்கை உணவை உட்கொண்டால், கோடையின் தாக்கம் இல்லாமல், உடல் குளிர்ச்சியாகவே இருக்கும்.
கோடையில் வெயில்படும்படி வெளியே செல்லும் போது, 'விட்டமின் டி' எனும் சத்து உடலில் சேர்கிறது. குறிப்பாக, காலை வெயில் உடலுக்கு மிகவும் நல்லது; மற்ற நேரத்தில் நேரடியான வெயிலில் அதிக நேரம் நிற்காமல் இருப்பது நல்லது. கோடையின் வெப்பத்தை மட்டுமே எண்ணாமல், இந்த காலகட்டத்தில் நம் உடலையும், மனதையும் புத்துணர்வடைய செய்ய வேண்டும்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான்
மதுரை
94441 54551
