PUBLISHED ON : ஜூலை 11, 2021

ஆயுர்வேதத்தில் கண் மருத்துவ சிகிச்சை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அறிவியல் முன்னேற்றங்கள் பல ஏற்பட்ட போதும் கண் மருத்துவத்தில் ஆயுர்வேதம் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு நிகரில்லை. வாழ்க்கைமுறையும், உணவு முறைகளும் கண்ணின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாக்கிறது அல்லது பாதிக்கிறது என ஆயர்வேத ஆராய்ச்சிகள் விளக்குகின்றன.
பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்பு, பாரம்பரிய காரணங்களால் கண்நோய்கள் ஏற்படுகின்றன. கண் நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்கள் பலவற்றை ஆயுர்வேதம் வரையறுக்கிறது.
கண்நோயும் காரணங்களும்
துாரத்தில் உள்ள பொருட்களை உற்று நோக்குவது, சிறிய பொருட்களை கூர்ந்து பார்ப்பது, பகலில் துாக்கம், இரவில் துாக்கம் இல்லாதது, அதிக அழுகை, அதிக கோபம், வெயிலில் அலைவது, கவலை, காயங்கள், அதிக புளிப்பு தன்மை உள்ள பொருட்கள் சாப்பிடுவது, தும்மல், மலம் கழிப்பது போன்றவற்றை தடுப்பது, வாந்தி வந்தால் தடுப்பது, அதிகம் வாந்தியெடுப்பது, கண்ணீர் வருவதை தடுத்தல், அதிகமாக ஆவிபிடிப்பது போன்றவை பொதுவான காரணங்கள். இவை பல வழிகளில் நமது கண்ணிற்கு இடையூறு தந்து நோயை உருவாக்கும்.
நோய் இருப்பதன் அறிகுறிகள்
பார்வையில் சிறு குறைபாடு ஏற்பட்ட பின்பு தான் பலர் கண் நோயை பற்றி உணர்ந்து கொள்கின்றனர். அப்படி அல்லாமல் சிறு காரணங்களை வைத்தே கண்ணிற்கு சிரமம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கண்கலங்கி இருத்தல், சுருங்கி இருத்தல், அரிப்பு, எரிச்சல், துாசி விழுந்தது போன்ற உணர்வு, தீராத வலி, கண்ணீர் ஒழுகுதல், கண்ணில் பாரம் அதிகமாக இருத்தல், சிவந்த நிறம் போன்றவை கண்ணின் வெவ்வேறு நோய்களின் அறிகுறிகள். இவற்றை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை துவங்காவிட்டால், நோய் தீவிரமடையவோ, பார்வை குறைபாடு ஏற்படவோ காரணமாகலாம்.
சில காரணங்களால் ஏற்படும் கண்நோய்களால் பார்வை போய் விட்டால் திரும்ப கிடைக்காது என்பது அபாயகரமான விஷயம். ஒரு மனிதனுக்கு பார்வை போனால் என்ன ஆகும் என்று சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. எனவே கண்ணின் ஆரோக்கியத்தில் நாம் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
சிகிச்சை முறைகள்
ஆயுர்வேத கண் சிகிச்சையில் மருந்து சாப்பிடுதல், கண்ணில் செய்யப்படும் சிகிச்சைகள், பஞ்ச கர்மம், ரசாயன சிகிச்சை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச கர்மம் என்ற ஐந்து வகை சிகிச்சைகள் மூலம் முதலில் நம் உடல் துாய்மை செய்யப்படுகிறது. நோய்களுக்கு ஏற்றவாறு கண்ணில் தாரா, அஞ்சனம், தர்ப்பணம், புடபாகம் போன்ற சிகிச்சைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கண்ணை கழுவுதல், துளிதுளியாக மருந்து விடுவது, கண்ணில் மருந்தை எழுதுவது, கண்ணில் பாத்திக்கட்டி மருந்து நிரப்புவது என பல விதமாக பக்க விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
என்ன சாப்பிடலாம்
கண் நோய் பாதிப்பு இல்லை என்றாலும் கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து சாப்பிட வேண்டியவை:கோதுமை, வரகு, பாசிபயறு, காய்கறிகள், கீரை, மாதுளை, திரிபலா, இந்துப்பு, வெண்ணெய், நெய், பசும்பால்.தவிர்க்க வேண்டியவைஅஜீரணம் ஏற்படுத்தும் உணவுகள், பசி இல்லை என்றாலும் மீண்டும் மீண்டும் சாப்பிடுவது, அதிக காரம் உள்ள உணவுகள், வாயு ஏற்படுத்தும் உணவுகள், இரவில் தாமதமாக உணவு அருந்துதல், தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது, தயிர், மதுபானம், புளி, உப்பு, உழுந்து, புளித்த உணவுகள், கடுகு எண்ணெய், சர்க்கரை சேர்த்த உணவுகள், முளைகட்டிய தானியங்களை தவிர்ப்பது நலம்.
கண்ணை அடிக்கடி கசக்குவது, அதிகம் பேசுவது, புகை அதிகம் உள்ள இடத்தில் நிற்பது, அடிக்கடி சூரியனை பார்ப்பது, தண்ணீரில் அதிக நேரம் மூழ்கி இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பாத பராமரிப்பு
கண்ணின் பாதுகாப்பிற்கு கால் பாதங்களின் பாதுகாப்பும் மிக முக்கியம். காலில் அதிக வெப்பம் ஏற்படுவது, காயங்கள் ஏற்படுவது கண்ணையும் பாதிக்கும். கால் பாதத்தில் எண்ணெய் தேய்ப்பது, குளிர்ந்த நீரால் காலை நன்றாக கழுவுவது போன்றவை நல்லது.
தற்போது குழந்தைகள், இளைஞர்கள் கண்நோய்களால் அவதிப்படுவது அதிகமாகி விட்டது. துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவது, ஊட்டச்சத்து தரும் உணவு உண்ணாதது, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், துாக்கமின்மை போன்றவை இதற்கு காரணம். அலைபேசி, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றின் அதிக உபயோகம் கண்ணிற்கு பெரும் ஆபத்து. எனவே அவற்றை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் டாக்டர்கள் ஆலோசனைப்படி அதற்கான கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும்.
தலைமை மருத்துவர்,
ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை
கூத்தாட்டுகுளம், கேரளா.
94470 33927

