PUBLISHED ON : ஆக 04, 2020

''தினமும், 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பதன் வாயிலாக, சிறுநீரகங்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளலாம்,'' என்கிறார் கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர் காந்திமோகன்.
சிறுநீரக பாதிப்பு எதனால் ஏற்படுகிறது... பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
ரத்தம் அழுத்தம், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை, டாக்டர் பரிந்துரையின்றி மருந்து சாப்பிடுவது, வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது, பாம்புகடி உள்ளிட்ட விஷம் பாய்வது, சிறுநீரக கற்கள் ஆகியவற்றால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுகிறது.சிறுநீர் வெளியேறுவதில் தடை, சிறுநீர் நுரைத்து, அதிக அடர்த்தியாக போவது, சிறுநீர் குறைவாக போவது, கால்வீக்கம், மூச்சுத்திணறல், ரத்தம் குறைவது ஆகியவை அறிகுறிகள்.
சிறுநீரகங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
நடைபயிற்சி, உணவில் உப்பை குறைப்பது, ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது. தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்ளாமல் இருப்பது, நாளொன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது ஆகியவற்றின் வாயிலாக, சிறுநீரகத்தை பாதுகாக்கலாம்.சிறுநீரக பாதிப்பை எப்படி தெரிந்து கொள்வது?ரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதிப்பதின் வாயிலாக, தெரிந்து கொள்ளலாம். கிரியாட்டினின் 1 மில்லி கிராம், யூரிக் ஆசிட் 7 எம்.ஜி., யூரியா 40 எம்.ஜி., வரை இருக்கலாம். இந்த அளவு உயரும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சி ஸ்டாட்டின், சி டெஸ்ட் வாயிலாக சிறுநீரக செயல்பாட்டை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
தற்போதைய சூழலில், சிறுநீரக நோயாளிகள் எப்படி இருக்க வேண்டும்?
மிகவும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். தனித்திருப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது அவசியம். ஏனென்றால் எதிர்ப்பு சக்தி உருவாவது இவர்களிடம் குறைவாகவே இருக்கும். சிறுநீரக மருத்துவர் உட்கொள்ள அறிவுறுத்தும் உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு திட்டமிட்டிருந்தால், அதை தற்போது மேற்கொள்ளலாமா?
தற்போதைய சூழலில் சிறுநீரகத்தை தானம் கொடுப்பவர், பெற்றுக்கொள்பவர் ஆகியோருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் தள்ளிப்போடுவது நல்லது.

