PUBLISHED ON : டிச 18, 2019

* பற்கள் பாதிப்பிற்கு காரணங்கள் என்ன?
வாயில் இயற்கையாகவே பல வகை பாக்டீரியாக்கள் உள்ளன. சாப்பிடும் போது வாயில் தங்கும் உணவு, பானங்களில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை, இப்பாக்டீரியாக்களுடன் தொடர்பு கொள்ளும். இதனால் பற்களில் பிளாக் என்னும் அழுக்குப்படிவம் படர்கிறது. இதில் உள்ள அமிலங்கள் பற்களின் மேற்பரப்பை மெல்ல தாக்கத் துவங்கும். இதுவே பல் சிதைவு, ஈறுநோய், சொத்தை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வித்திடுகிறது.
* பற்களை கரை படியாமல் காப்பதன் அவசியம்...?
பற்களில் படியும் கரை ஒரு கட்டத்தில் டார்ட்டர் எனப்படும் கடினமான படிவமாக மாறும். இதனால் ஈறுகள் வீங்கி, அடிக்கடி ரத்தம் கசியும். இதையும் கவனிக்க தவறினால் பெரியோ எனப்படும் தீவிரமான நோய் பாதிப்பு ஏற்படும். இதில் பற்களை சுற்றியுள்ள திசு மற்றும் எலும்புகள் பாதிக்கப்படும். ஈறு, தாடை எலும்புகள் பற்களில் இருந்து விலகிச்செல்லும். இதனால் பற்களில் தளர்வு ஏற்பட்டு விழக்கூடும். சர்க்கரை நோயாளிகளுக்கு இப்பாதிப்பு கூடுதல் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். எனவே முறையான பல் பராமரிப்பும், பல் துலக்குதலும் அவசியம்.
* கர்ப்ப காலத்தில் பெண்கள் பற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்களே. உண்மைதானா?
நிச்சயமாக கவனம் தேவை. ஏனென்றால், கர்ப்பிணிகளின் பற்களில் பாதிப்பு, ஈறுகளில் நோய் ஏற்பட்டால் அது கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. கர்ப்ப காலத்தில் எக்ஸ்ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்கள் பல் சிகிச்சையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை தேவையில்லை எனில் பிரசவமாகும் வரை அதை தள்ளிப்போட வேண்டும்.
* வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது. தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
நாம் உண்ணும் உணவு, புகையிலை மற்றும் மதுப்பழக்கம், மோசமான பல் சுகாதாரம், வறட்சியான வாய், தொற்று, இரைப்பை, உணவுக்குழாய் நோய்கள் போன்றவை தான் துர்நாற்றத்திற்கு காரணம். உதாரணத்திற்கு வெங்காயம், பூண்டு அதிகம் சேர்த்த உணவுகள் சாப்பிடும் போது ஒருவித வாடை வரும். உணவு சாப்பிட்டப் பின் வாய் கொப்பளிக்க வேண்டும்.
* பல் பாதிப்புகளுக்கு என்ன தீர்வு?
பொதுவாக பற்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஈறுநோய் வந்தால், ஈறு சிவக்கும். வீக்கம், ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம் ஏற்படும். இப்படி ஒவ்வொரு பாதிப்பிற்கும் அறிகுறிகள் தென்படும். பாதிப்பை முன் கூட்டியே தவிர்க்க பற்களை பொக்கிஷமாக பாதுகாப்பது அவசியம். தினமும் காலையில் துயில் எழுந்ததும், இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பும் என இருவேளை பல் துலக்குவது நலம். புகைப்பழக்கம், மது அருந்துதல் பற்கள், ஈறுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்பழக்கங்களை கைவிட வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் பரிசோதனை செய்வதும் நல்லது.
* எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?
நம்மில் பலரும் நீண்ட நேரம் பல் துலக்குவதால் தான் பற்கள் பளிச்சிடும் என கருதி நீண்ட நேரம் வரை பல் துலக்குகின்றனர். இது தவறு. இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் தான் பல் தேய்க்க வேண்டும். நீண்ட நேரம் பல் துலக்கினால் எனாமல் தேய்ந்து பல் கூச்சம் ஏற்படும். அதே போல கடினமான பிரைஷ பயன்படுத்தக்கூடாது.
டாக்டர் உஷா
பல் மருத்துவ நிபுணர்
மதுரை.
94433 25703
