PUBLISHED ON : ஜூன் 14, 2015
கண்ணாடி அணிந்தால் அழகு போய்விடும் என்று, பெரும்பாலான பெண்கள் கவலைப்படுகின்றனர். தற்போது, பலவிதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாகவும், சிக்கென்றும் கவர்ச்சியாக வந்து விட்டது. அவரவர்கள் தங்கள் முக வாட்டத்திற்கு தகுந்தபடி, கண்ணாடிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆனாலும், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடும் விஷயங்களில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். கண்ணாடி அணியும் பெண்கள், தங்கள் கண்களுக்கு எவ்வாறு 'மேக் -அப்' போட வேண்டும்?
* முதலில் ஆரம்பிக்க வேண்டியது புருவத்தில் இருந்துதான். உங்கள் புருவம் சீர்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
* கண் இமை, ரோமங்களை சுருட்டி விடுங்கள்.
* பெண்கள் ஐ -ஷேட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கண்ணாடியின் பின்புறம் நசநசவென ஆக்கிவிடும். இவற்றில் சிலவகை, தோல் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. நல்ல தரமான ஐ -லைனரை பயன்படுத்தினால் போதும்.
* பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பலவிதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள்.
* நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை, உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள், கண்களுக்கு மேக் அப் செய்யும்போது, கண்கள் சிறியதாக தெரிந்தால், கண்களை சுற்றி ஐ-லைனரை பயன்படுத்துங்கள். ஒருவேளை, கண்கள் பெரியதாக தெரிந்தால், அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.
