PUBLISHED ON : ஜூன் 14, 2015
'நகம் கடித்தால் சோறு கிடைக்காது என்பார்கள்; சோறு கிடைக்காததால் தானே நகத்தை கடிக்கிறோம்' என்றொரு கவிதை உண்டு. நம்மில் பலர், கோபம், வருத்தம், அழுகை, ஆழ்ந்த சிந்தனை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாக நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இது மிகவும் மோசமான பழக்கம். இதனால், ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் எழுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்படும். நகங்களை கடிப்பவர்கள், சில சமயம் அதை விழுங்கவும் வாய்ப்பு உண்டு. இப்படி விழுங்குவதால், வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத்துகள்கள் குடல் வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைட்டிஸ் எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்துவிடும். பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுமையாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.
நகம், பாக்டீரியா வளரும் இடம். சால்மனெல்லா, இ.கோலி., பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது, அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும்.

