PUBLISHED ON : அக் 02, 2016

யாராலும் மறக்க முடியாதது, பள்ளிப் பருவம்.
இப்போதும் நினைத்தால், கடந்த கால நினைவலைகள் வந்து தாலாட்டும். உன் பெயர் என்ன? எந்த ஊர்? உனக்கு என்ன கலர் பிடிக்கும்? என்ற உரையாடலில் துவங்கும் பள்ளி நட்பு. முதல் வகுப்பில், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நண்பன், சிநேகிதியை இன்றும் நினைத்து பார்த்து மனம் நெகிழும்.
மதிய உணவின் போது, குழுவாக அமர்ந்து, எல்லாருடைய உணவையும், சிறு உருண்டைகளாக வாங்கி ரசித்து, ருசித்து உண்டு, உடற்கல்வி வகுப்பில் கோகோ, கால்பந்து விளையாடி, நண்பன், வீட்டு பாடம் எழுதாமல் இருந்தால், நாம் எழுதியிருந்தாலும், எழுதவில்லை எனக்கூறி, அவனுடன் சேர்ந்த ஆசிரியரிடம் அடி வாங்கிய சம்பவங்கள், இன்றும் சிரிக்க வைக்கும்.
துவங்கும் அறிவுரை
ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது, நீங்கள் ஆறாம் வகுப்புக்கு முன்னேறியுள்ளீர்கள், வாழ்வின் மிக முக்கியமான பக்கம். ஒவ்வொருவரும் தங்களது குறிக்கோளை நிர்ணயித்து பயணிக்க வேண்டும். விளையாட்டு தனத்துக்கு ஈடாக, படிப்பின் மீதும் ஆர்வம் செலுத்த வேண்டும். குழுவாக படித்து, வாழ்வியல் கருத்துக்களை மனதில் பதிய வைக்க வேண்டும் என்று, ஆசிரியர் சொன்ன கருத்து, கண் முன்னே வந்து போகும்.
இதற்கு பின், ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர்கள் இதையே கூறி நம்மை செதுக்குவர். குழுவாக இணைந்து பாடத்தை படித்து, மாற்றி மாற்றி ஒப்பித்து, தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியரிடம் பாராட்டை பெற்றதும்; அடுத்த தேர்வை படிக்காமல் எழுதி, 35 மதிப்பெண் பெற்று ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும், நம்மை என்றென்றைக்கும் மறக்காது.
ஆட்டோகிராப் நினைவலை
10ம் வகுப்பு, பிளஸ் 2 வரும் போது, விளையாட்டுக்கு நேரம் இருக்காது. முதல் மதிப்பெண் யார் வாங்குவது என்ற போட்டியே இருக்கும். நண்பர்களுடனான அரட்டை, சற்று குறையும். பிளஸ் 2 முடித்தவுடன் பிரியா விடை இருக்கிறதே...! அவ்வளவு நாள் இனிமையாக இருந்த மனதுக்குள், சோகம் போர்த்திக் கொள்ளும். காரணமே இல்லாமல் கண்கள் கலங்கும்.
மறந்தும் மறந்து விடாதே என்ற வாசகம் அடங்கிய ஆட்டோகிராப் புத்தகத்தை, தேடிப்பிடித்து படிக்கத் தோன்றும். கனா காணும் காலங்களாகிய கல்லூரி
படிப்பில், சற்று வேறு விதமான நட்பு சிறகடித்து பறக்கும். அரியர் வைத்து, ஒரே இரவில், நண்பனை சொல்லித் தரச்சொல்லி, முழு மூச்சாக தேர்ச்சி பெறுவது, எவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறோம் என்று, உங்களுக்கே சபாஷ் சொல்ல வைக்கும்.
ஒரே ஒரு கடிதம்
ஒவ்வொருவரும், தன் துறையில் சிறந்த நிலையிலும், அவர்களுக்கு பிடித்த வேலைகளிலும், தொழில் முனைவோராகவும், சமுதாயத்தில் ஜொலித்து கொண்டு இருக்கலாம். என்றாவது ஒரு நாள், நம் நெருங்கிய நண்பனை, பல ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது, கண்கள் ஓரம், சாரல் பெய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இதை நினைத்து பார்க்கும் போது, உடனடியாக நண்பனை பார்க்க வேண்டும் என்று தூண்டும் நினைப்பு தான், ஆகச்சிறந்த நட்புக்கான அடையாளம். எந்தவொரு கஷ்டமும், சுகமான நினைவுகளுக்கு முன், ஒன்றும் இல்லாமல் போகிறது. நினைவுகள், ஒரு மனிதனை செம்மைப்படுத்துகிறது. எவ்வளவோ பிசியாக இருந்தாலும், பழைய நினைவுகளுக்கு, தினமும் கொஞ்சம் நேரமாவது இடம் கொடுங்கள். சமூக வலைதளங்களில், நட்பு பாராட்டுவதை விட, பிடித்த நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதிப் பாருங்களேன். திரும்ப வரும் கடிதத்தை படிக்கும் போது, கொண்டாடப்படும் ஆனந்தம்.
