PUBLISHED ON : அக் 02, 2016

வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பிரச்னை இருக்கிறது. பணம் இல்லாதவர்களிடம், பணம் இல்லையே என்ற ஏக்கம். பணம் படைத்தவர்களிடம், நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம். உணவு கிடைக்காதவருக்கு, எப்போது வயிறு முட்ட உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, பிடித்த உணவு வகைகளை உண்ண முடியவில்லையே என்ற கவலை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருப்பது இயல்பு.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், பிரச்னையாக இருந்தாலும், அதை அழகாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும். சாமர்த்தியமாக சமாளிக்கும் போது, பிரச்னைகள் வந்த சுவடே மறைந்து போகும். அர்த்தம் இல்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை தவிர்த்து விடுங்கள். எந்த இடத்தில் பேச வேண்டும்; எந்த இடத்தில் பேசக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சங்கடம் இருக்கும்
தான் என்ற அகந்தை ஒரு மனிதனை, புறந்தள்ளி விடும். இதை விட்டொழியுங்கள். எல்லோரும் நமக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எண்ணி விடக்கூடாது. மதிப்பு கிடைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது முதல்படி. மதிப்பு கிடைக்காத பட்சத்தில், சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது படி.
குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும், அலுவலக ஊழியர்களிடமும், நீங்கள் சொன்னதே சரி என்று வாதிட வேண்டாம். யாராவது நல்ல கருத்துக்களை சொன்னால், அதை ஆமோதிக்க கற்றுக் கொள்ளுங்கள். குறுகிய மனப்பான்மை கொண்ட மனம், குப்பை தொட்டிக்கு சமம். விசால பார்வையை வைத்துக் கொண்டால், அடுத்த வேலையை எளிமையாக செய்வதற்கு வழி கொடுக்கும். புறம் பேசுவதை, யாராலும் தடுக்க முடியாது. உங்களை பற்றி ஒருவர் குற்றம் சொன்னால், உங்களுடைய தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும். நாமும் புறம் பேசுவதை தவிர்த்து விடுவது நல்லது.
மரியாதை முக்கியம்
உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை தவிர்ப்பது, நம் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மிகப்பெரிய ஆசை, மனிதர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லக்கூடும். தேவைக்கு அதிகமாக ஆசை, கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படும். கடன், ஒருவரை நிம்மதியாக தூங்க விடாது. எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ, சொல்லி கொண்டிருக்க வேண்டாம்.
நீங்கள், உங்களுக்கு எதிர்பார்க்கும் மரியாதையை, மற்றவர்களுக்கும் தருவது தானே இயல்பு. வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது. நீங்கள் எதை வெளிப்படுத்துகிறீர்களோ, அதுவே உங்களுக்கு வந்து சேரும். இதமான வார்த்தைகளை பயன்படுத்துவது, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்லது. 'இனிய உளவாக இன்னாத கூறல்' என்ற திருக்குறள், நல்வழியில் அழைத்து செல்லும்.
புன்முறுவல் வெளிப்படுத்தக் கூட நேரம் இல்லாமல், அப்படியென்ன வேலை இருக்கிறது. புன்முறுவல், வாழ்க்கையில் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். ஒருவர் உங்களை கடிந்து பேசுகிறார் என்றால், நீங்களும் பதிலுக்கு பேசினால், சண்டைக்கு வழி வகுக்கும். ஒரு நிமிடம் மவுனமாக இருந்து பாருங்கள். கோபம், இடம் தெரியாமல் போகும். கோபப்பட்டு பேசிய நபரிடம், சற்று நேரம் கழித்து, குறிப்பிட்ட விஷயத்தை விளக்கினால், அடடா... நாம் கோபப்பட்டது தவறு என எண்ணத் தோன்றும். இந்த நடவடிக்கை, என்றென்னும் மகிழ்ச்சிக்கு வித்திடும்.
