PUBLISHED ON : அக் 02, 2016

அலைபேசி எனப்படும் மொபைல் போன் கருவிகள், அடிப்படை தகவல் பரிமாற்றத்தில் துவங்கி, இன்று, அனைத்து வித பயன்பாடுகளையும் வழங்க துவங்கியுள்ளது. தகவல் பரிமாற்றத்தையும் தாண்டி, இவை இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாக முக்கிய காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவில், இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அலைபேசி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டு விட்டோம். அதிலும், விலை உயர்ந்த அலைபேசிகள் அணிவகுத்து காத்திருக்கின்றன. இதை பயன்படுத்தும் சந்தைகள், புதுப்புது அலைபேசிகளை விற்பனைக்கு அனுப்புகின்றன. இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், நமக்கு ஏற்பாடும் பாதிப்புகளும் அதிகம் இருக்கின்றன என்பதை உணரத் துவங்க வேண்டும்.
பயன்படுத்தும் போது உஷார்
கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். போனைப் பயன்படுத்தும் போது, தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், சிறது நேர இடைவெளியில் மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதாக கருதினால், பயன்படுத்துவதை உடனடியாக தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால், போன் அதிக சக்தியை பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
தூங்கும் போது...!
குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். இயலும்போது, பேசுவதை தவிர்த்து, டெக்ஸ்ட் வழியாக தகவலை அனுப்பலாம். இரவில் தூங்கும் போது, படுக்கையில், உங்கள் தலையணை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம். பயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனை பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவுக்குள்ளாக உள்ள போனை பயன்படுத்துவது உத்தமம்.
உங்கள் அருகே, தொலைபேசி இருந்தால், மொபைல் போனுக்கு பதில், இதையே பயன்படுத்தலாம். உங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனை தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்த வேண்டும். காரணம், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை எளிதாகக் கடத்தும் தன்மை கொண்டவை.
குழந்தைகளுக்கு 'நோ'
பெரும்பாலும், குழந்தைகளின் கையில் மொபைல் போன் இருப்பது அதிகரித்து விட்டது. குழந்தைகள், மொபைல் போனைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது.
அவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சை வெகுவாக ஈர்த்து விடும். எனவே, அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். பொழுது போகவில்லை என்றால், யாருக்காவது பேசலாம் என்று, போனை கையில் எடுத்து விடக்கூடாது. காரணமாக பேசினால், விரைவில் கட் செய்து விடுவோம். காரணம் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தால், பேச்சின் நீளம் அதிகரிக்கும். எனவே, முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது.
