PUBLISHED ON : அக் 02, 2016

கைகளை சுத்தமாக கழுவி, சாப்பிட வேண்டும் என்பது, சுகாதார விழிப்புணர்வின் முக்கிய முதல் படி. சிலர், சுத்தமாக கைகளை கழுவாமல், கழுவி விட்டேன் என்ற சாக்குபோக்கு சொல்லி சாப்பிட அமர்ந்து விடுவர். இதனால், வயிற்று கோளாறுகளுக்கு வித்திடுகிறது.
வயிற்றுப் போக்கு, சீதபேதி துவங்கி, கொக்கிப் புழு, குடல் புழுக்கள் வரை வயிற்றுக்குள் வசிக்க ஆரம்பிக்கின்றன. சாப்பிடும் உணவு, அசுத்தமான சூழலில் தயாரிக்கப்பட்டிருந்தாலோ, உணவு பரிமாறும் பாத்திரங்கள் அசுத்தமாக இருந்தாலோ, வயிற்றுக் கோளாறு வரும். குழந்தைகளுக்கு, நாக்குப்பூச்சி தொந்தரவு அடிக்கடி வர வாய்ப்பு உண்டு. இவர்களை அடையாளம் காண்பது எளிது. நாக்குப்பூச்சி உள்ள குழந்தைகளுக்கு, வறட்டு இருமல் இருக்கும். வயிறு பெருத்தும், வீங்கியும் பலவீனமாகக் காணப்படுவர். இவர்களையும், கைகளை கழுவி உணவை சாப்பிட வேண்டும் என்று பழக்கப்படுத்த வேண்டும். இப்படி செய்வதால், நாக்குப் பூச்சி முட்டைகள் வாய்க்குள் செல்வதைத் தடுக்கமுடியும்.
எளிதாக உட்புகும்
உணவுகளை ஈ மொய்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகள், மலம் கழித்த பின், கைகளை நன்கு கழுவிடப் பழக்கப்படுத்த வேண்டும். சுற்றியிருக்கும் நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணிகள், நம்மை தாக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் சுத்தமாக இல்லாவிட்டாலோ, அசுத்த உணவை உட்கொண்டாலோ, சுத்தமற்ற நீரை குடித்தாலோ, உடலுக்குள் எளிதாக சென்று விடும்.
குடலில் புழுக்கள் உள்ளதை, எப்படி தான் கண்டறிவது என்று கேள்வி எழுப்புவது இயல்பு. வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை, இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த அறிகுறிகள் தென்படும் போது, சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றி வர வேண்டும். இவை, வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து விடும்.
பப்பாளி விதையின் சுவை, பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த பப்பாளி விதையை, மாதம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், வயிற்றில் வளரும் உருளைப்புழு, நாடாப்புழு ஆகியவை அழிந்து வெளியேறும். உங்கள் குடலில் புழுக்களின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் எனில், காலையில் எழுந்ததும், இரண்டு பற்கள் பூண்டு அரைத்து, பேஸ்ட் தயாரித்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். உணவில், பூண்டு அதிகம் சேர்த்து வந்தாலும் புழுக்களை வெளியேற்றலாம்.
கைகொடுக்கும் பாதாம்
தினமும், காலையில், சிறிதளவு பாதாமை உட்கொண்டு வந்தால், வயிற்றில் புழுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை கட்டுப்படுத்தும். தினமும், இரண்டு டீஸ்பூன், கற்றாழை சாறை, தொடர்ந்து, ஒரு வாரம் குடித்து வந்தால், வயிற்றில் வளரும் குடல் புழுக்களை தடுக்கலாம்.
அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமிலைன் எனும் நொதி, வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உங்கள் வயிற்றில் புழுக்கள் இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டால், ஒரு வாரத்துக்கு, தினமும் சிறிது அன்னாசியை உட்கொண்டு வர வேண்டும். பூசணிக்காய் விதைகள், உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழித்து வெளியேற்ற உதவும். எனவே, மாலை வேளைகளில், சிறிது பூசணிக்காய் விதைகளை உட்கொண்டு வர மாற்றம் தெரியும். வெங்காயத்திலும் இருக்கிறது இதற்கான மருத்துவம். வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, ஒரு நாளைக்கு, இரண்டு டீஸ்பூன் என, தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வர, வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்கள், வேறு சில குடல் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி வெளியேற்றப்படும்.
