PUBLISHED ON : செப் 28, 2016

பூச்சிகள் கடித்தால் உடலில் ஒவ்வாமை (Alergy) ஏற்படுமா?
எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான், போன்ற பூச்சிகள் கடித்தால் ஒவ்வாமை ஏற்படலாம்.
பூச்சி கடித்தால், அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன?
பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.
பூச்சி கடியால் சிலருக்கு மயக்கம் வருவது ஏன்?
பூச்சி கடித்தவுடன் மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவாமல் தடுப்பதற்காக உடலிலுள்ள ரத்தக்குழாய்கள் சுருங்குகின்றன. இதனால் இதயம், மற்றும் மூளை போன்ற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் மயக்கம் வருகிறது.
பூச்சி கடித்ததற்கான அறிகுறிகள்?
ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும். மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவும்போது தோல் சிவக்கும், தடிக்கும், லேசாக வலிக்கும். காய்ச்சல் வரும். இரண்டாம் நிலையில் அரிப்பும் வீக்கமும் இருக்கும். கடிபட்ட இடம் மட்டுமல்லாமல் கண் இமைகள், காது மடல்கள், உதடு போன்ற இடங்களில் நீர் கோர்த்து வீக்கங்கள் ஏற்படும்.
பூச்சி கடியின் தீவிர பாதிப்புகள் என்னென்ன?
கடுமையான தலைவலி, வாந்தி, தொண்டை வறண்டு அடைக்கும், பூச்சியின் விஷத்தன்மை கடுமையாக இருந்தால் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். மயக்கம் ஏற்படும். இந்நிலையில், உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
பாதிக்கப்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?
ஒரு 1 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு கலந்து குடிக்க கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில், 'ஆன்டி செப்டிக்' களிம்பு தடவலாம். காய்ச்சல், உடல் வலி இருந்தால், 'பாராசிட்டமால்' மாத்திரை சாப்பிடலாம். அலர்ஜிக்காக, 'அவில்' மாத்திரை ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை
பெற வேண்டும்.
எங்கெல்லாம் விஷப்பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது?
ஓட்டு வீடுகளில் குளவி, தேனீ, விஷத்தேள், பூரான் போன்றவை இருக்கும். ஓலை வீடுகளில் பூரான் கரப்பான் இருக்கும். தோட்டம் தோப்புகளில் குளவி, தேனீ, வண்டுகள் இருக்க வாய்ப்புண்டு.
யாரெல்லாம் பூச்சி கடியினால் பாதிக்க வாய்ப்புண்டு?
தேனீ, பட்டுப்பூச்சி வளர்ப்போர், தோட்ட வேலை செய்பவர்கள், காட்டில் மரம் வெட்டுவோர், வன அதிகாரிகள், மலைவாழ் மக்கள், போன்றோர் பாதிக்க வாய்ப்புண்டு.
இப்பிரச்னைக்கு சிகிச்சை என்ன?
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பூச்சிக் கடிக்கான எதிர்ப்பு மருந்து, 'ஆன்டி சீரம்' கிடைக்கிறது. இது சென்னையிலுள்ள, 'கிங் இன்ஸ்டிடியூட்' மற்றும் ஊட்டியிலுள்ள, 'பாஷியர் இன்ஸ்டிடியூட்டி'லும் தயாரிக்கப்படுகிறது.
பூச்சி கடியிலிருந்து தப்பிப்பது எப்படி?
பூச்சிகள் அதிகம் வாழும் இடங்களுக்கு செல்லும்போது, பாதுகாப்பான உடை, காலணிகள் அணியலாம். தோட்ட வேலைகளில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் மற்றும் பாரபின் எண்ணெய் இரண்டையும் கலந்து, கை, கால், முகங்களில் தடவிக் கொண்டு சென்றால் பூச்சிகள் கடிக்காது.
கி.சாய்ரமணன்
பொது மருத்துவர், மதுரை
98400 99639
