PUBLISHED ON : டிச 19, 2014

மனிதனுக்கு, இதயம் மிக இன்றிமையாதது. இதை பாதுகாப்பதும், இதன் இயக்க தடைகளை நிவர்த்தி செய்வதும் நம் முக்கிய பணி.
இதய நோய் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, கட்டுப்படுத்த சில வழிமுறைகளை அவசியம் கையாள வேண்டும். இதயநோய் எதனால் வருகிறது என்பதை அறிந்தால் தான், அதை போக்க நல்வழியை, நாம் மேற்கொள்ள முடியும்.
இதய நோய்
இதய நோய் அல்லது இதய ரத்த குழாய் நோய் (அ) இஸ்லீமிக் இதய நோய் என கூறப்படுவது தான், உலக முழுவதும் ஏற்படும் மரணங்களுக்கு காரணமாய் அமைகிறது. இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கரோனரி, ரத்த குழாயின் உட்புறம் உள்ள, மிருதுவான பகுதியில், கொழுப்பு படிந்து ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதுவே, ஒரு படலமாக படிந்து ரத்தம், ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் மேற்கொள்ள முடியாமல் தடுக்கிறது.
இந்த அடைப்பு, 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திலான பெரும் அடைப்பை மாறும் போது, இதயத்திற்கு தேவையான, ரத்தம் கூட செல்ல முடியாமல், நெஞ்சில் ஒரு வலி ஏற்படுகிறது. இவ்வலி இடதுபுற கைக்கு செல்கிறது.
இது ஆஞ்ஞைனா என்ற மார்பு வலி. இவ்வலியை உடனே கவனித்து, இதயத்தை கவனித்து, நம் வாழ்நாளை நீட்டிக்க செய்ய வேண்டும்.
இதய நோய் ஏற்படுவதற்கான காரணிகள்: இதய நோய் தோன்றுவதற்கான ஆபத்து காரணிகள் என்பவை, 246 என்றாவறு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதாவது, இதயநோய் தோன்றவும், வளரவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாய் இருக்கின்றன.
அதாவது பழக்க வழக்கம், உடல்ரீதியிலான, உணவுரீதியில், மருத்துவ ரீதியில், சுற்றுச்சூழல், உடலமைப்பு போன்றவை சார்ந்த பல காரணிகள் இருந்த போதும், அவற்றில் மிக முக்கியமான, 15 காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பதினைந்தில், 12 காரணிகள் மாற்றக் கூடிய காரணிகள் எனவும், மாற்ற இயலாத, 3 காரணிகள் எனவும் பிரிக்கப்படுகிறது. இக்காரணிகள் பற்றி அறிந்தால், இதய நோயை தடுக்க முடியும்.
இதயநோய் ஏற்பட முக்கிய காரணங்கள்: மன இறுக்கம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால், ரத்தத்தில் அதிக ட்ரை கிளிசரைடுகள், உயர் ரத்த அழுத்தம், குறைந்த HDL கொலஸ்ட்ரால், உடற்பருமன், நீரிழிவு நோய், உடலுழைப்பு மற்றும் புகைப்பிடித்தல் போன்றவையுடன் வயது, பாலினம் மற்றும் பரம்பரையும் முக்கிய காரணமாக திகழ்கிறது.
மன உளைச்சல்
வேறு எந்த வித காரணமின்றி, இதயநோய் ஏற்படுவதற்கு மன உளைச்சல் மிக முக்கிய காரணமாக அமைகிறது. உடல் பாதிப்புகளால் இதய நோய் வருபவர்களை கண்டறிவது சுலபம். மன இறுக்கம் அல்லது மன உளைச்சல் உள்ளவர்களை, எவ்விதமும் கணக்கிட முடியாது. அவர்களின் மன இறுக்கம் தீவிர இதய நோயிற்கு வழி வகுக்கும். அதாவது எந்நேரமும் கடுகடுப்பாக, முன்கோபிகளாகவும், நேர பற்றாக்குறை உள்ளவர்களாக வும், மன உளைச்சல் உள்ளவர்களை இதய நோய் தாக்கும் என ஆய்வு கூறுகிறது.
இதய நோயை கட்டுப்படுத்த மன உளைச்சலை கட்டுப்படுத்துவது அவசியம்.
ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால்
உடலில் மிக முக்கியமான பணி செய்வன கொலஸ்ட்ரால். மனிதன் உயிர் வாழ கொலஸ்ட்ரால் அவசியம். எனவே, உடலுக்கு தேவையான மிக குறைந்த அளவு கொலஸ்ட்ராலை கல்லீர லே தயாரிக்கும் திறன் உடையது. இச்சிறப்பு மிக்க கொலஸ்ட்ரால் உடலில், 100 மில்லி ரத்தத்தில் 130 மி.கி., முதல் 160 மி.கி., வரை இருப்பது தான் சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது. அது அதிகரித்தால், LDL கொலஸ்டிராலாக ரத்த குழாய்களில் படிகிறது.
நாம் உண்ணும் உணவுகளின் வாயிலாக, அதிகமான கொலஸ்ட்ராலை ரத்தத்தில் சேர்க்கிறோம். எனவே, கட்டுப்பாடான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவையால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.
உயர் ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் தொடர்ந்து, 140/ 90 மி.மீ., என்று இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம். அமைதியாய் கொல்லும், என்று பெயர் ரத்த அழுத்தத்திற்கு உண்டு. காரணம், எந்த வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதை கண்டறிந்து ரத்த அழுத்தம் சராசரி அளவான 120/80 மி.மி., என்றவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமான அளவு உப்பு சேர்ப்பதும், மன உளைச்சலும் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகளுக்கு கரோனரி குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உடற்பருமனையும், அதிக ரத்த அழுத்தம் அதிக கொலஸ்ட்ரால் எல்லாம் இணைந்து இதயத்தில் நோய் ஏற்பட வழிவகை செய்கின்றன.
உடற்பருமன்
உடற்பருமன் உடையவர்களுக்கு, இதய நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடற்பருமன் உள்ளவர்கள் சராசரியாக மாதத்திற்கு, 2 முதல் 3 கிலோ எடைகுறைய தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிக உடலுழைப்பு இன்மை
உடற்பயிற்சி செய்வும் குறைவு, பணி செய்வது அதிகமில்லை எனும் போது, உடலின் தகுதி குறைந்து, இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது. சாதாரண பணியை கூட செய்ய முடியாமல், அடுத்தவன் துணை நாடும் சமூகமாய் மாறி விடுகிறது. எனவே, நம் அன்றாட பணிகளை நாமே செய்து உடலுக்கு உறுதியை ஏற்படுத்துவோம்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் காரணங்களால், இதய நோய் பாதிப்பு ஏற்படும். புகையிலை எவ்வடிவத்தில் பயன்படுத்தினாலும், மதுவை குடிப்பதினாலும் இதயத்திற்கு பங்கம் செய்கிறோம். இதய நோய் வருவதற்கு இவை முக்கிய காரணிகள். இவற்றை தவிர்ப்போம். இதயத்தை காப்போம்.

