மனசே மனசே குழப்பம் என்ன! - இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கணும்!
மனசே மனசே குழப்பம் என்ன! - இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கணும்!
PUBLISHED ON : ஜூன் 30, 2019

எப்போதும் சோர்வாக, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர் இப்போதைய மாணவ - மாணவியர். கேட்டால், தலை வலிக்கிறது என்று சொல்கின்றனர். என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்.
குழந்தைகளுக்கு, இந்த அளவு தலைவலி வருவதற்கு என்ன காரணம், என்று ஆய்வு செய்தேன். 13 - 18 வயதிற்குட்பட்ட, 150 பெண், 150 ஆண் என்று, 300 குழந்தைகளிடம், தொடர்ந்து, 150 நாட்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில், நான் கண்டறிந்த தகவல்கள், சர்வதேச மருத்துவ இதழில், கடந்த மார்ச் மாதம் வெளியானது.
பள்ளி நாட்களில், எட்டாம் வகுப்பு குழந்தைகள், சராசரியாக, ஏழரை - எட்டு மணி நேரம் துாங்குகின்றனர். 10ம் வகுப்பு குழந்தைகள், ஏழரை மணி நேரமும், பிளஸ் 2 வந்தவுடன், ஆறரை மணி நேரமும் துாங்குகின்றனர். வார இறுதியில் மட்டும், ஒன்பதரை - 10 மணி நேரம் துாங்குகின்றனர்.
இந்த குழந்தைகளில், 11 சதவீத குழந்தைகள், தலைவலியாலும், 27 சதவீதம் துாங்கி எழும் போதே, சோர்வாகவும் உணர்கின்றனர். 11 சதவீத குழந்தைகள், வகுப்பில், கவனம் இல்லாமல், துாக்கம் வருவதாக தெரிவித்தனர். 35 சதவீத குழந்தைகளுக்கு, துாங்குவதில் சிரமம் இருக்கிறது. 45 சதவீத குழந்தைகள், மன அழுத்தத்தால், துாக்கத்தின் இடையில் எழுந்து விடுகின்றனர்; மீண்டும் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதில், 1 சதவீத குழந்தைகள், துாக்கமின்மைக்கு மருந்துகள் சாப்பிடும் நிலையும் உள்ளது.
டீன் - ஏஜ் குழந்தைகள், தினமும் சராசரியாக, ஒன்பது மணி நேரம் துாங்க வேண்டியது அவசியம். துாக்கம் குறைந்தால், பாடத்தில் கவனம் இருக்காது; ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது; நினைவாற்றல் குறையும்; தலைவலி, சோர்வு, சக்தி இல்லாமல் இருப்பது, கோபம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகம் வரும்.
படுக்கையில் படுத்தபடி, எதையாவது யோசிப்பது, வருத்தம், சோகம் போன்ற எதிர்மறை உணர்வுகள், குழந்தைகளின் துாக்கத்தை பாதிக்கும். துாங்கச் சொன்னவுடன், மன அழுத்தமும், பதற்றமும் ஏற்படுவது, படுத்தவுடன் துாக்கம் வராமல் சிரமப்படுவது, குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
துாக்கம் குறைய காரணம் என்ன?
முன்னுாறு குழந்தைகளில், 40 குழந்தைகள், மொபைல் போனை பயன்படுத்துவதாலும், 'டிவி' பார்ப்பதால், 15 குழந்தைகளும், மற்ற குழந்தைகள், அதிக நேரம் வீட்டுப் பாடம் செய்வதாலும் துாங்கும் நேரம் குறைகிறது.
மருத்துவ ரீதியில் இவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மொபைல் போன் பயன்படுத்துவதில், ஒழுங்கு முறையை பின்பற்றப் பழக்க வேண்டும்.
சராசரியாக, ஒன்பது மணி நேரம், தினமும், குழந்தைகள், ஆழ்ந்து துாங்குகின்றனரா என்பதை, பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
டாக்டர் ராதா குமார், குழந்தைகள் நல மருத்துவர், சென்னை
drradhakumar15@yahoo.co.in
