PUBLISHED ON : ஜூன் 30, 2019
இரவு நேரம் நன்றாக துாங்கினால் போதும், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். தொடர்ந்து வருடக் கணக்கில் இந்த இரவு நேர துாக்கத்தை சிதைத்து வந்தால், உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் சிதைந்துபோகும். இரவு வேளையில் தான் கல்லீரலானது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் முடிகிறது. அப்போது நீங்கள் நன்றாக துாக்கத்தில் இருந்தாக வேண்டும்.
நீங்கள் விழித்துக் கொண்டிருந்தால் இவையாவும் நடக்காது. கல்லீரலே உடல் தசைகளையும், தசை நார்களையும் உறுதியாக வைக்கிறது. துாக்கத்தை சிதைக்கும் போது கல்லீரலும் சிதைந்து உடல் தளர்ந்து விரைவில் வயோதிகம் வரத்துவங்கும்.
நாடி, நரம்புகள் வலுவிழந்து ஒரு கட்டத்தில் மன இறுக்கம் ஆட்டிப்படைக்கும். பொதுவாக நோய்கள் உருவாக அடிப்படை காரணம் கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடுமே ஆகும்.
துாக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்
பிறந்த குழந்தை நாள்தோறும் 14-18 மணி நேரம் துாங்க வேண்டும். வயது வந்தோருக்கு தினமும் 8 மணி நேரம் துாக்கம் அவசியம். உடல் உழைப்பாளிகளுக்கு 6-8 மணி நேரம் போதாது. ஆண்களை விட பெண்களுக்கு ஒரு மணி நேரம் துாக்கம் அதிகம் தேவை. மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும், மூளையில் துாக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதியிலுள்ள செல்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் துாக்கமின்மை ஏற்படும். மனச்சோர்வு, பதட்டமடைதல், கவலை, சோகம், வேண்டாத எண்ணங்கள் மனதில் தோன்றுதல் போன்ற மனநல பாதிப்புகளாலும் துாக்கமின்மை உண்டாகும்.
ஆஸ்துமா, பக்கவாதம், இருதய நோய்கள், வலிகள், அடிபட்ட காயம் வலி, சர்க்கரை நோயால் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதாலும், செரிமானக் கோளாறு போன்றவற்றால் தொடர்ந்து துாங்க முடியாமல்போகும். அதிக குளிர், வெப்பம், ஈரப்பதம், கொசுத்தொல்லை, சத்தங்கள் போன்ற புறக் காரணங்களும் துாக்கத்தை பாதிக்கும்.
போதுமான துாக்கம் இல்லையென்றால் தலைவலி, கண் எரிச்சல், பகலில் வேலையில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடியாமை, இருதய தாக்குதல், வலிப்பு, எரிச்சலடைதல், நினைவுத்திறன் குறைதல், மனக்குழப்பம், சக நண்பர்களிடம் தொடர்பு குறைதல், மன அழுத்தத்தை தொடர்ந்து ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு தொடர்பான நோய்கள் அதிகரித்தல் போன்ற கோளாறுகள் உருவாகும். ஆங்கில மருத்துவ முறை மாத்திரைகள் செயற்கையான துாக்கத்தையே தரும். ஒரு வகையான மயக்க நிலையிலேயே உங்களை வைத்திருக்கும். வயதுக்கேற்ற, பருவத்திற்கேற்ற, உழைப்புக் கேற்ற துாக்கம் அமையாத போதும், துாக்கத்தில் சில அசாதாரணச் செய்கைகள் நிகழும் போதும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் முழுமையான பலன் பெற முடியும்.
டாக்டர். மதுமிதா
மதுரை, 89392 66767
