PUBLISHED ON : மார் 24, 2019

பழைய தமிழ் சினிமாக்களில், நீண்ட வசனம் பேசும் போது, எதிர்பாராமல், வாயிலிருந்து வழியும் ரத்தத்துடன், எனக்கு, 'பிளட் கேன்சர்' என்று சொல்லி, கேன்சர் என்றாலே இறப்பு, என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் பதித்தனர். மேற்கத்திய இலக்கியங்களில், பல நுாறு ஆண்டுகளாக, காசநோயை, இப்படித் தான் கையாண்டு உள்ளனர்.
காசநோய் எனப்படும் டி.பி., 'மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' என்ற பாக்டீரியத் தொற்றால் ஏற்படுகிறது என்பதை, பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த மூட நம்பிக்கைகளை மாற்றி, ஜெர்மனி நாட்டு மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் காக், பெர்லினில், அறிவித்த தினம், மார்ச் 24, 1882.
மற்ற எந்த நோயை விடவும், காசநோயின் வரலாறு வியப்பானது.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதீத காதல் உணர்வு உள்ளவர்களாகவும், அறிவு ஜீவிகளாகவும், உணர்ச்சிவசப் படுபவர்களாகவும் இருப்பர் என்ற நம்பிக்கை ஆழமாக சமுதாயத்தில் பதிந்திருந்தது என்று காத்தரீன் ப்ரைன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
காசநோயை, காதலின் குறியீடு ஆகவும், மனதிற்குள் சுடர் விட்டு எரிந்த, மோகத் தீயே, காய்ச்சலாக வெளிப்பட்டது என்றும் உச்சக்கட்ட கற்பனையில் எழுதியுள்ளனர்.
ஷேக்ஸ்பியர் தனது, 'மச் அடோ அபவுட் நத்திங்' என்ற நகைச்சுவை நாடகத்தில், பீயட்ரைஸ் என்பவள், பென்டிக்ட்டின் காதலை ஏற்றுக் கொள்வதே, அவனது காசநோயைக் குணப்படுத்தத் தான் என்கிறாள்.
ஒரு தலைக்காதலால் ஏங்குபவர்கள், காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அப்போது இருந்த நம்பிக்கை. அவர்கள் ஆசைகளை பூர்த்தி செய்வதே, நோயிலிருந்து அவர்களை மீட்கும் என்றும் நம்பப்பட்டது.
பிரபல கவிஞர் ஜான் கீட்ஸ் இலக்கியம் மீதிருந்த காதலால், தன் மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். அவரது தாயாரும், இளைய சகோதரரும், காசநோய்க்கு பலியாயினர். ஜான் கீட்சிற்கு, தன் ரசிகையான பானி பிரவுன் மீது காதல் மலர்ந்த நேரத்தில், கீட்சிற்கு காசநோய் வந்து விட்டது.
நாளுக்கு நாள் நோய் முற்றியது. பரிசோதித்த டாக்டர், 'உனது உடலின் சக்தியை காதல் அழித்து, உனக்கு மரணத்தை ஏற்படுத்தி விடும். காதலியை சந்திக்காதே' என்று எச்சரித்தார்.
பத்தொன்பதாம் நுாற்றாண்டில், அறிவியல் எழுத்தாளர் டைகர் ஆசான், மனைவி வொஜீனியாவிற்கு காசநோய். இனிமையாகப் பாடக் கூடிய அவர், ஒருநாள் பாடியபோது, வாய் வழியே ரத்தம் வழிந்தது; அதன்பின், அவருடைய எழுத்துகளில், காசநோய் பிரதான இடத்தைப் பிடித்தது; காசநோய் மரணங்கள், புனிதமானவை; இந்த நோய் வந்து இறப்பவர், சொர்க்கத்திற்கு செல்வர், என்ற நம்பிக்கையும் இருந்திருக்கிறது.
ரஷ்ய எழுத்தாளர் டாஸ்டாய், 'குற்றமும் தண்டனையும்' என்ற புத்தகத்தில், காசநோய் மரணத்தில், புனிதத் தன்மை இருப்பதாகவே குறிப்பிடுகிறார். மூளையில், காசநோய் ஏற்பட்டதால், இவாளோசனா என்ற கதாபாத்திரம் மனநிலை பாதிக்கப்பட்டார் என்று குறிப்பிடுவதும் காய்ச்சலும், நோயும் வறுமையின் பிடியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின், பதக்கங்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இப்படி, 17 - 19ம் நுாற்றாண்டு வரை, காதலோடு காசநோய், பின்னிப் பிணைந்திருந்தது. ராபர்ட் காக்கின், பெர்லின் உரைக்கு பின்னரே, இலக்கிய வட்டத்தில், காசநோய் குறித்த மாற்றங்கள் வந்தன.
காய்ச்சல், சளியில் ரத்தம், தொடர் இருமல், எடை குறைவது என்று காச நோயின் சில அறிகுறிகள். இன்று இருக்கும் மருந்து, மாத்திரைகள், அன்று இருந்திருந்தால், ஆறு மாதங்கள தொடர் சிகிச்சையில், கூட்டு மருந்துகள் தருவதன் மூலம், காச நோயை, எளிதாக குணப்படுத்தியிருக்க முடியும்.
டாக்டர் வி.பி.துரை, துணை இயக்குனர்,
மருத்துவப் பணிகள் - காசநோய் பிரிவு,
கன்னியாகுமரி.
மொபைல்: 98657 95874
