PUBLISHED ON : மார் 30, 2016

உமாவுக்கு, அன்று உலகமே தலைகீழாய் சுற்றுவது போல் இருந்தது. காரணம், 'நீங்கள் தாயாகப் போகிறீர்கள்' என்று, மருத்துவர்கள் கூறியதிலிருந்து, சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் கழித்து தங்கியிருக்கும் கரு. மகிழ்ச்சியில், உமாவின் கணவர் தினேஷ், மனைவி கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தும், அன்பாகவும் கவனித்தார்.
நாட்கள் கழிந்தன. மருத்துவரிடம் ஆறாவது மாத மருத்துவ ஆலோசனைக்காக சென்றபோது, 'ஸ்கேன்' பரிசோதனை செய்யப்பட்டது; உமாவின் கருவில் வளரும் குழந்தைக்கு, 'மெனிங்கோமைலோசில்' எனப்படும் முதுகு தண்டுவட வளர்ச்சி குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
உடனே மருத்துவர்கள், 'கருவை கலைக்க வேண்டும். ஆனால், ஆறு மாதக் கருவை கலைத்தால், உமாவின் உயிருக்கு ஆபத்து' என்றனர். தாயாகப் போகிறோம் என்றபோது தலைகீழாக சுற்றிய உலகம், இருண்டது போலாகி விட்டது. உமாவின் மருத்துவர், பரிசோதனை முடிவுகளை என்னிடம் காண்பிக்க சொன்னதால், என்னை சந்திக்க, உமா தம்பதி வந்திருந்தனர். பரிசோதனை முடிவு,
கருவிலுள்ள குழந்தைக்கு, 'மெனிங்கோமைலோசில்' என்று ஆணித்தரமாக கூறியது.
இது ஏன் ஏற்படுகிறதென்றால், கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில், 'போலிக் ஆசிட்' குறைபாட்டின் காரணமாக, கருவின் நரம்புத் தொகுதி பாதிக்கப்படுகிறது. இந்தியாவில், 1,000 கர்ப்பிணி பெண்களில், ஐந்து பேருக்கு இதுபோன்ற பிரச்னை இருப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.
முதுகெலும்புத் தண்டில் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புத் தொகுதிகள், முழுமையாக மூடப்படாமல் இருக்கும். இதனால், மூளை, மண்டை ஓடு வளர்ச்சியில் குறைபாடு காணப்படும். வளர ஆரம்பிக்கும் முகுதுத் தண்டுவட எலும்புகள் வளர்ச்சி பெறாது. முதுகில் கட்டி உருவாகி, அந்த கட்டிக்குள் நரம்புகள் சென்றுவிடும்.
இக்குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, சிறுநீரும், மலமும் தானாகவே வெளியேறும். தலை பெரிதாகிக் கொண்டே செல்லும். குழந்தையின் ஆயுட்காலம் படுக்கையிலேயே கழிய நேரிடும்.
தாய், தந்தையாக வேண்டும் என்று நினைக்கும் தம்பதி, திருமணம் ஆன நாள் முதல், 'போலிக் ஆசிட்' மிகுந்த பச்சை காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், உயிரணுக்களில் உருவாகும் குரோமோசோம் குறைபாடுகள் தவிர்க்கப்பட்டு, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
உமாவிற்கு பிரசவ காலம் நெருங்கியது. குழந்தை பிறந்த சில நாட்களில், முதுகுத் தண்டுவட பகுதியில், அறுவை சிகிச்சை மேற்கொண்டு நரம்புத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. உமாவின் குழந்தைக்கு, ஒரு வயதாகப் போகிறது. நான், 'முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்' என்பது உமாவின் அன்புக்கட்டளை. அன்புக் கட்டளையை மீற முடியுமா? அதனால் கிளம்பிக் கொண்டு இருக்கிறேன்; பிறந்த நாள் பரிசு வாங்க...
மா.வெங்கடேசன்
குழந்தைகள் நல நிபுணர், சென்னை.
98402 43833
