தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மன பாதிப்பாலும் வறட்டு இருமல் ஏற்படலாம்

மன பாதிப்பாலும் வறட்டு இருமல் ஏற்படலாம்

மன பாதிப்பாலும் வறட்டு இருமல் ஏற்படலாம்


PUBLISHED ON : ஆக 04, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளம்பெண்களுக்கு மன அழுத்தம், தாழ்வுணர்ச்சி, அதிக வேலைப்பளு காரணமாகவோ, மனதில் பாதிப்பு ஏற்பட்டாலோ வறட்டு இருமல், மூச்சுத்திணறல் காணப்படலாம்

* விநாயகம், விழுப்புரம்: என் வயது 35. ஆறு மாதங்களாக அலர்ஜியால் இருமல் ஏற்படுகிறது. அலர்ஜி, இருமல் மூச்சுப் பயிற்சிகள் மூலம் குணமாக வழியுண்டா?

மூச்சுப் பயிற்சிகள், உங்கள் நுரையீரல் திறனை அதிகரிக்க பயன்படுகின்றன. ஆனால், அலர்ஜியை கட்டுப்படுத்துவதில்லை. அலர்ஜியை கட்டுப்படுத்த மருந்துகள் எடுப்பது அவசியம். அலர்ஜியை கட்டுப்படுத்திய பின், நுரையீரல் திறனை அதிகரிக்க மூச்சுப் பயிற்சிகள் செய்வது, பலன் தரும்.

மருந்துகளையும், மூச்சுப் பயிற்சியையும் ஒரே வண்டியின் இரு சக்கரங்கள் போல கருதலாம். உங்கள் அலர்ஜி இருமலை கட்டுப்படுத்த மருந்துகளையும், நுரையீரல் திறனை அதிகரிக்க, மூச்சுப் பயிற்சியையும் செய்யுங்கள்.

* மணிகண்டன், திருச்சி: என் வயது, 45. காலை எழுந்தவுடன் தும்மல் துவங்கி, நாள்முழுவதும் தொடர்கிறது. தூங்கும்போது மூக்கு அடைக்கிறது. தொண்டை வறண்டு போகிறது. இதற்கு காரணம் என்ன?

நம் சுவாசப்பாதை, பல்வேறு அலர்ஜியை உண்டாக்கும் பொருட்களால் பாதிக்கப்படுகிறது. நம் சுவாசப்பாதை மூக்கில் ஆரம்பித்து, நுரையீரலில் காணப்படும், சிறிய காற்றுப் பைகளில் முடிவடைகிறது. சுவாசப் பாதை அலர்ஜியால் பாதிக்கப்பட்டால் இருமல், தும்மல், மூச்சுத் திணறல், மூக்கடைப்பு ஏற்படுகிறது. காது, மூக்கு மற்றும் தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டால் தும்மல், மூக்கடைப்பு, தொண்டை வறட்சி ஏற்படுகிறது. இதற்கு, 'நாசில் ஸ்பிரே' பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜியை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் படிப்படியாக அலர்ஜியை குறைக்கலாம்.

* சந்திரகுமாரி, கோவை: என், 16 வயது மகளுக்கு, ஒரு மாதமாக வறட்டு இருமல் இருக்கிறது. தொடர்ந்து இருமிக் கொண்டிருக்கிறாள். உறங்கியதும் இருமல் இல்லை. இதற்கு என்ன காரணம்?

இளம்பெண்களுக்கு மனஅழுத்தம், தாழ்வுணர்ச்சி, மனதில் குழப்பம் அல்லது அதிக வேலைப்பளு காரணமாகவோ, மனதில் பாதிப்பு ஏற்பட்டாலோ இருமல், மூச்சுத்திணறல் அல்லது வேறு சில உடல் ரீதியான மாற்றங்கள் காணப்படலாம். தன்னை யாரும் சரியாக கவனிக்கவில்லை; அலட்சியப்படுத்துகின்றனர் என்ற எண்ணத்தாலும் இருமல் ஏற்படலாம். இதை, 'சைக்கோஜெனிக் காப்' என்பர். இவையாவும் அவர்களுக்கு தெரிந்து நடப்பதில்லை. அவர்களின் ஆழ்மனதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பால், உடலில் ஏற்படும் ஒரு அறிகுறியாகும். இதற்கு மருந்துகள் பயன்படாது. அவர்களுக்கு வேண்டியது பெற்றோரின் அன்பு, அரவணைப்பாகும். உங்கள் மகளிடம் அதிக நேரம் செலவிடுங்கள். அவள் பிரச்னையை கண்டறிந்து, அவள் மனதுக்கு பிடித்தமான செயல்களை செய்யுங்கள். அவள் உடல் நிலை எளிதில் சரியாகும்.

டாக்டர் எம்.பழனியப்பன்,

மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us