PUBLISHED ON : டிச 09, 2019

* குழந்தை பிறந்ததும் சர்க்கரை தண்ணீர் (சேனை) கொடுக்கலாமா
அப்படி கொடுப்பது ஆரோக்கியமானதல்ல. காரணம் அது சுத்தமும், சுகாதாரமும் அற்றது. அதைவிட முக்கியமானது குழந்தையின் பசியை அடக்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த தாயின் முதல் பாலை (சீம்பால்) குடிக்கவிடாமல் தடுக்கும்.
* குழந்தை பிறந்ததும் பால் கொடுப்பது நல்லதா
சாதாரண பிரசவமாக இருந்தால், பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரலாம். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்திருந்தால், 4 மணி நேரத்திற்கு பின் தான் தர வேண்டும். மருத்துவ ரீதியாக பிரசவம் ஆனதில் இருந்து முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சுரக்கும் பால் கொழுப்பு சத்து நிறைந்திருக்கும். அப்போது சிறிய அளவில் பால் கொடுத்தால் பசி தணிந்து விடும். கண்டிப்பாக தாய்ப்பால் தவிர்த்து வேறு பால் தரக்கூடாது.
* குழந்தை சிறுநீர், இயற்கை உபாதை கழிப்பதை கண்காணிப்பது அவசியமா
பிறந்த 24 மணி நேரத்திற்குள் இயற்கை உபாதையும், 48 மணி நேரத்தில் சிறுநீரும் கழிக்க வேண்டும். அந்த நேரத்தை கடந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
* குழந்தையை எப்போதெல்லாம் குளிக்க வைக்கலாம்
2 கிலோவிற்கும் குறைவான எடையில் பிறந்திருந்தால், குளிப்பாட்டக் கூடாது. இதுபோன்ற குழந்தையை தினமும் சுத்தமான, வெதுவெதுப்பான தண்ணீரில் துடைத்து எடுக்க வேண்டும். சரியான எடையில் பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி விழும் வரை குளிப்பாட்ட கூடாது. அதன் பின் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குளிப்பாட்டினால் போதும். குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்தால், குழந்தை உடம்பு சூடு சீரான நிலையில் இருக்கும்.
சரியான எடையில் பிறந்த குழந்தைக்கு தேவையில்லை.
* குழந்தைக்கு பால் கொடுக்கும் விதம் என்ன
குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதில் வேறுபாடு அதிகம் உண்டு. பொதுவாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை பால் கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடம் வரை கொடுக்கலாம். இதனால் 18 முதல் 20 மணி நேரம் நன்றாக துாங்கும். ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுப்பி பால் கொடுக்கலாம்.
* குழந்தை கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றலாமா
கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றி குளிப்பாட்ட கூடாது. பிறந்த குழந்தையின் கண், புருவத்திற்கு மை போடக்கூடாது. மூக்கு, வாயில் சளி உறிஞ்சி எடுக்க கூடாது. வசம்பு, பெருங்காயம் கொடுக்க கூடாது. பவுடர் போடக்கூடாது. இரவு துாங்கும்போது 'டயாபர்' போடுவதை தவிர்க்கவும். ஏனென்றால் சிறுநீர் கழித்து ஈரமானால், அப்பகுதியில் புண் ஏற்படும்.
* வேலைக்கு செல்லும் தாய், தாய்ப்பாலை எடுத்து வைத்து செல்லலாமா
சுத்தமான பாத்திரத்தில் சாதாரண வெப்பநிலையில் இருந்தால் 6 மணி நேரமும், குளிர்சாதன பெட்டியில் இருந்தால் 24 மணிநேரமும், அவற்றிலும் 'ப்ரீசரில்' இருந்தால் 3 முதல் 4 நாட்கள் வரை வைத்திருந்து கொடுக்கலாம்.
* தாய்க்கு அதிக பால் சுரக்க எந்த உணவு எடுக்க வேண்டும்
தானியங்கள், பருப்பு, மீன், முட்டை, மட்டன், பூண்டு சாப்பிடலாம். இது தவிர இரும்பு, கால்சியம் சத்து மாத்திரைகளை குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் முடியும் வரை சாப்பிடலாம். பால் குடித்ததும் நல்ல துாக்கம் வரும். இதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பது, சரியான எடை அதிகரிப்பதும் ஏற்படும்.
குழந்தை அழுவதை வைத்து பால் போதவில்லையோ என முடிவு செய்து, பால்பவுடர்
கொடுக்கக்கூடாது.
டாக்டர் பி.குணா
குழந்தைகள் நல சிறப்பு நிபுணர்,
சிவகங்கை. 98429 85881
