தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!

வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!

வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!


PUBLISHED ON : மார் 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தலைவலியைத் தாங்க முடியாமல் பெண் தற்கொலை, கடும் வயிற்று வலி இளைஞர் தற்கொலை!' இப்படியான செய்திகளை நீங்கள் செய்தித்தாளில் பார்த்திருப்பீர். தலைவலி, வயிற்றுவலிக்கெல்லாமா தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று கூடச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அந்த வலியை உணர்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் வேதனை புரியும்.

குழந்தை தாவி ஓடி வருகிறது. காலில் ஏதோ தடுக்க, தடுமாறி கீழே விழுகிறது. மூக்கில் அடிபட, துடித்து அழுகிறது. அம்மா பதறிப் போய் ஓடி வருகிறார். 'அய்யோ! என் கண்ணு! எங்கே காட்டு!' என்று சொல்லி, காயம் பட்ட இடத்தை நீவி விடுகிறார். மருந்து போடுகிறார். பெரிய காயம் என்றால், மருத்துவமனைக்குத் தூக்கிப் போகிறார். வலியை வாங்கிக் கொள்ள முடியுமா? அதுமட்டும்தான் நடக்காது. எவ்வளவு பிரியத்துக்குரியவராக இருந்தாலும், ஒருவர் இன்னொருவர் வலியை வாங்கிக் கொள்ள முடியாது. 'வலி என்பது மரணத்தை விடக் கொடுமையானது' என்று சொன்னார் ஓர் அறிஞர். 'கருணைக் கொலை' என்ற கருத்தாக்கம் ஏற்பட்டதே, 'வலி' என்ற கொடுமையால் தான். வாழ்நாள் முழுக்க அகிம்சைக்காகவே போராடிய மகாத்மா காந்தியே, வலியால் துடித்த ஒரு கன்றுக் குட்டியை, கொலை செய்யும்படி சொன்னதாக, நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இதற்கு மாற்றே இல்லையா? மனிதனுக்கு ஏற்படும் வலியைக் குறைக்கவே முடியாதா? அதை இல்லாமல் செய்யவே முடியாதா?

'முடியும்' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் டாக்டர் பிரபு திலக். இவர் தற்போது சேலம் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். 'வலி நிர்வாகத் துறை' (Interventional Pain Management) யில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, அதில் தொடர்ந்து ஆய்வு செய்தவர். சமீபத்தில், டில்லி வலி நிர்வாகத் துறை மையத்தில், (Delhi Pain Management Centre) பெலோஷிப் முடிந்திருக்கிறார். இவருக்குப் பயிற்சி கொடுத்தவர் பிரபல மருத்துவர் ஜி.பி.துரேஜா.

'வலி என்பது, நாம் அன்றாடம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் பாதிக்கும் விஷயம். நோய் இருந்துவிட்டுப் போகட்டும். குறைந்த பட்சம் வலி இல்லாமலாவது பார்த்துக்கொள்ளலாம் அல்லவா? அதற்காகத்தான் இந்த துறையில் ஈடுபாடு செலுத்தினேன்' என்கிறார் டாக்டர் பிரபு திலக்.





இனி அவரே...

ஒருவருக்குத் தலைவலி. குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னென்னவோ மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தும், பாதிப்படைந்தவருக்கு வலி குறையவில்லை. குடும்ப மருத்துவருக்கு, நோயாளிக்கு கண்ணில்தான் ஏதோ பிரச்னை என்று படுகிறது. உடனே, அவரை கண் மருத்துவரிடம் அனுப்புகிறார். கண் மருத்துவர் சோதித்துப் பார்க்கிறார். கண்ணில் எந்தப் பழுதும் இல்லை. அந்தச் சமயத்தில் நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. அவர், பல் மருத்துவரிடம் நோயாளியை அனுப்புகிறார். பல் மருத்துவர் சிகிச்சை செய்த பிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. அவர், திரும்ப குடும்ப மருத்துவரிடமே அனுப்பப்படுகிறார். 'எதற்கும் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன' என்று மருத்துவருக்குத் தோன்ற, அதையும் செய்கிறார் அந்த நோயாளி. ரிசல்ட் படு சுத்தம். ஒரு பிரச்னையும் இல்லை. கடைசியாக வலி நிர்வாகத்துறைக்கு வருகிறார் அந்த நோயாளி. அங்கேதான் அவருக்கான சரியான தீர்வு கிடைக்கிறது.

எந்த நோயாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே வலி நிர்வாகத்துறை மருத்துவர்களிடம் போய்விட்டால் பிரச்னையே இல்லை. அவர்கள், வலி எதனால் வருகிறது, என்ன சிகிச்சை தரவேண்டும், நோய் எப்போது முழுமையாக குணமாகும் என்று அத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துவிடுவர். இது ஒன்றும் மந்திர வித்தை இல்லை. அதே சமயம், 'என்னிடம் ஒரு நாற்காலி இருக்கிறது. அதில் உட்கார்ந்தால் எந்த வலியும் இல்லாமல் போய்விடும்' என்று சொல்லும் ஏமாற்று வித்தையும் அல்ல. புதுவிதமான மருத்துவ முறையும் அல்ல. 'அல்ஜியாட்ரி' என்றழைக்கப்படும், சிகிச்சை முறை தான் இது.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வரும் அலோபதி மருத்துவம் தான் இதுவும். அதன் அடிப்படையில், உலகெங்கும் இருக்கும் பல்வேறு டாக்டர்கள் செய்த ஆராய்ச்சிகளாலும், சோதனைகளாலும் கிடைத்திருக்கும் அதிசயம். பொதுவாக, மருந்து, மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மிக அதிகமான டோஸ்கள் கொண்ட மாத்திரையையோ, மருந்தையோ சாப்பிடுபவர்களுக்கு அல்சர் வரும். சிறுநீரகக் கோளாறு வரும். இதயத்தில் பாதிப்பு ஏற்படும். இது போல என்னென்னவோ எதிர் விளைவுகள் தோன்றும். ஆனால், அல்ஜியாட்ரி சிகிச்சையில் அது கிடையாது.

காரணம் என்னவென்றால், ஊசி மூலமாகச் செலுத்தப்படுவது மருந்து அல்ல. ஒரு வகை சுத்தமான காற்று என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் நிஜம். அதே போல நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளும், பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தாதவை. முக்கியமாக அறுவை சிகிச்சை என்பது கிடையவே கிடையாது. இந்தியாவில் மக்களை அதிகம் பாதிக்கும் நோய் எது? எயிட்சா? காச நோயா? நீரிழிவு நோயா? கிடையாது. 'ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்ட்' என்று சொல்லப்படும் மூட்டுவலிதான் என்று அடித்துச் சொல்கிறது ஒரு புள்ளி விவரம்.

'வயசானாலே மூட்டு வலி வந்துவிடும்' என்று சிலர் சொல்வர். உண்மையில், வயதுக்கும், மூட்டு வலிக்கும் சம்பந்தமே இல்லை.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, மூட்டு வலி சர்வ சாதாரணமாக வந்துவிடும். நமக்குத் தெரிந்த குடும்பங்களிலேயே, யாராவது ஒருவருக்காவது, நிச்சயம் மூட்டுவலி இருக்கும். இந்நோய்க்கு, மருத்துவத்துறையில் மருந்து, மாத்திரை, பிசியோதெரபி என்று, பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவற்றால் பலன் கிடைக்கவில்லை என்றால், டி.கே.ஆர்., என்ற அறுவை சிகிச்சையை இறுதியாகச் செய்வர். அதை, Total Knee Replacement என்று சொல்வர்.

அறுவை சிகிச்சை மூலம், செயற்கை முறையில் கால் மூட்டைப் பொருத்திவிடுவர். முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கூட இந்தச் சிகிச்சையைச் செய்திருக்கிறார். வலி கூடாது என்பதற்காக இந்த அறுவை சிகிச்சை. அதற்குப் பிறகு சிகிச்சை பெற்றவர்கள், ரோபோ மாதிரி நடப்பர். டி.கே.ஆர்., அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவில், 10 அல்லது 20 சதவீதம் தான் செலவு ஆகும். மூட்டுவலி மட்டும் அல்ல, தலைவலி, புற்று நோயால் ஏற்படும் வலி ஆகியவற்றுக்குக்கூட வலி நிர்வாகத்துறை சிகிச்சை கொடுத்து குணப்படுத்துகிறது. ஒரு நோயாளி வருகிறார். தனக்குத் தாங்க முடியாத தலை வலி என்று சொல்கிறார். உடனே மருத்துவர், தலைவலிக்கு மட்டும் மருந்து கொடுத்தால் அது தவறு. அந்த வலி வருவதற்கான மூல காரணத்தை ஆராய்ந்து சிகிச்சை தரவேண்டும். அதைத்தான் வலி நிர்வாகத்துறை செய்கிறது.

சரி, தலைவலி வந்தவருக்கு மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. அதனால்தான் தலைவலி என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு ஊசி போட்டால், வலி போய்விடும். அது மட்டும்தானா, வலி நிர்வாகத்துறையின் வேலை? இல்லை. அதையும் தாண்டி, அந்தக் கட்டியை அகற்ற என்ன செய்யலாம் என்று நோயின் மூலம் வேரைத் தேடிப் போய் ஆராய்கிறது இந்த துறை. அதற்கான சிகிச்சையையும் கொடுக்கிறது.

ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்று ஒரு நோயைப் பற்றி நாம் அறிந்திருப்போம். முகத்தில் திடீரென்று மின்னல் போல வந்து வலி தாக்கும். பாதிக்கப்பட்டவர் அப்படியே துடிதுடித்துப் போய்விடுவார். எவ்வளவு சிகிச்சை கொடுத்தாலும் தீராத அந்த நோய்க்கு வலி நிர்வாகத்துறை தரும் சிகிச்சை நிரந்தரத் தீர்வாக இருக்கிறது. 'ஸ்லிப் டிஸ்க்' பிரச்னை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிற ஒன்று. முதுகுத் தண்டுவடத்தில் கணையங்களுக்கு நடுவே இருக்கும் ஜவ்வு வெளியே வந்து, அதற்கு அருகே இருக்கும் நரம்பு பாதிக்கப்பட்டு ஏற்படும் முதுகு வலி, பெரும்பாலும், எடை அதிகமாக உள்ளவர்களுக்கும், அதிக தூரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் வரும் கொடிய நோய். இந்த நோய் வந்தவர்கள், மருத்துவரைப் பார்ப்பர். அவர் சொல்கிறபடி அறுவை சிகிச்சை செய்துகொள்வர். ஆனால், அது நிரந்தரத் தீர்வு அல்ல. இழந்த ஜவ்வு திரும்ப வராது. மேலும், பல பக்கவிளைவுகள் ஏற்படும். அறுவை சிகிச்சை, தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், அந்த வலி வந்துகொண்டே தான் இருக்கும். இந்த, 'ஸ்லிப் டிஸ்க்' பிரச்னைக்கு வலி நிர்வாகத்துறை சிகிச்சையில் பூரண குணம் பெறலாம். சிலருக்கு அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போகும். தாங்க முடியாத தலைவலி இருக்கும். எப்போதும் உடல் அசதியாக இருக்கும். ஞாபக மறதி ஏற்படும். இந்த நோயை ஆங்கிலத்தில், 'Fibromyalgia' எ ன்று சொல்வர். இது, ஆண்களைவிட பெண்களை அதிகமாகத் தாக்கும் நோய்.

மருந்து கடைகளில், பெண்கள், 'கை, கால், குடைச்சல். ஏதாவது மாத்திரை குடுங்க' என்று கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் பார்த்தால், வலியால் அவதிப்படுபவர்கள் போல் தெரியாது. ஆனால், கடுமையான வலியைப் பொறுத்துக் கொண்டிருப்பர். இந்த நோய்க்கும் வலி நிர்வாகத்துறை சிகிச்சையில்'Trigger Point Injections' மூலமாக குணம் பெறலாம். சில குழந்தைகள் மிக புத்திசாலியாக இருப்பர்.

ஆனால், நடக்கும் போது நேராக இல்லாமல், ஒரு மாதிரி கோணலாக நடப்பர். கைகளை வளைத்தது மாதிரி வைத்துக் கொள்வர். இதற்குக் காரணம் இருக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால், பிரசவ சமயத்தில் மூளைக்குள் போகிற ரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அதனால் தான் அதன் அசைவுகள் அப்படி இருக்கும். இதை, Cerebral Palsy என்று சொல்வர். இப்படியான பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் வலி நிர்வாகத்துறையில், Botox ஊசி மூலமாக குணப்படுத்தப்படுகின்றனர். மாதவிடாய் காலங்களிலும், மெனோபாசுக்குப் பிறகும், பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலிகளுக்கு நிவாரணம் வலி நிர்வாகத்துறையின் சிகிச்சையின் மூலமாகக் கிடைக்கிறது. வலி உடல் சம்பந்தமானது மட்டும் அல்ல; மனம் சம்பந்தமானதும் கூட. தொடர்ந்து வலியால் அவஸ்தைப்படுபவர்கள், பல்வேறு விதமான மனச் சிக்கலுக்கு ஆளாகிவிடுவர். அது மன அழுத்தத்துக்குக் கொண்டு போய்விட்டுவிடும். சமூகத்தோடு ஒட்டி உறவாட முடியாது. திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாது. நண்பர்களையோ, உறவினரையோ தேடிப் போக முடியாது. ஒரு கட்டத்தில், உறவுகளையே தள்ளி வைத்துவிடும் நிலைமை கூட வந்துவிடும். இதற்கெல்லாம் வலி நிர்வாகத்துறையில் தீர்வு கிடைக்கிறது.

வலியை மட்டும் குணப்படுத்துவது வலி நிர்வாகத்துறையின் குறிக்கோள் அல்ல. வலியின் அடிப்படைக் காரணிகளுக்குள் சென்று, அதை முழுவதுமாக ஆராய்ந்து, அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் அந்த பிரச்னையிலிருந்து பாதிக்கப்பட்டவர் விடுபட வழிவகுப்பது தான் இத்துறையின் முக்கிய நோக்கம். இவ்வாறு சொல்கிறார்





டாக்டர் பிரபு திலக்.





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us