தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூட்டுகளை தாக்கும் ஏவுகணைகள்!

மூட்டுகளை தாக்கும் ஏவுகணைகள்!

மூட்டுகளை தாக்கும் ஏவுகணைகள்!


PUBLISHED ON : மார் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ்' எனப்படும் மூட்டு முடக்குவாதம் என்பது என்ன என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. இது, மூட்டுகளில் ஏற்படும் ஒருவித அழற்சி. தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க, நம் உடலில் உள்செயல்பாடுகளில் பல சிக்கலான, அதிசயமான செயல்கள் நடக்கின்றன. உதாரணமாக கொரோனா வைரஸ் நம் உடலினுள் நுழைந்தால், நோய் எதிர்ப்பு அணுக்கள் அவற்றை அழித்து விட்டால், நமக்கு அதன் பாதிப்பு வராது.

சில நேரங்களில், நம் உடலின் எதிர்ப்பு அணுக்கள், மூட்டுகளில் உள்ள செல்களை, வெளியில் இருந்து வந்திருக்கும் எதிரி என்று தவறாக நினைத்து, அழிக்க துவங்கும். 'ஏவுகணை தாக்குதல்' போல மூட்டுகளை தாக்குவதால், அந்த இடத்தில் உள்ள செல்கள் செயலிழந்து, அழற்சி ஏற்படும்.

இது எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், 20 - 45 வயது உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளையும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும் பாதிக்கலாம். ஆண்களை விடவும் பெண்களையே அதிகம் பாதிக்கும்.

மூட்டுகளில் வலி, வீக்கம், தசைகளில் இறுக்கம், காலையில் எழுந்தவுடன் கைகள் இறுக்கமாக இருப்பது, ஒரு மணி நேரம் கழித்து இறுக்கம் தளர்ந்து விடுவது, படுக்கையில் இருந்து எழுந்தவுடன், தரையில் கால்களை ஊன்ற முடியாமல் போவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால், கணுக்கால்கள், பாதங்கள், கால் மூட்டுகளில் பாதிப்பு இருக்கலாம்.

மணிக்கட்டுகள், மூட்டுகளில் பாதிப்பு அதிகம் இருக்கும். வலி இருக்கும் மூட்டுகளை தொட்டால் வெப்பமாக உணரலாம். இந்த பிரச்னைக்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டாம் என்று தவிர்ப்பது தற்கொலைக்கு சமம். ஆரம்பத்திலேயே வந்தால், சிகிச்சை எளிது. தாமதித்தால், கை மூட்டுகள் மடங்க துவங்கும்; அதை மாத்திரைகள் கொடுத்து, பழைய நிலைக்கு கொண்டு வருவது சிரமம்.

பொதுவாக காய்ச்சல் இதன் அறிகுறியாக இருக்காது. இரண்டு வாரங்கள் வலி தொடர்ந்து இருந்து, வலி நிவாரணிகளால் சரியாகாமல், அடுத்த சில வாரங்கள் வலி இருப்பது மற்றும் காய்ச்சல் வரும் உணர்வு இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். ருமட்டாய்டு ஆர்த்ரடிசை ரத்த பரிசோதனையில் உறுதி செய்யலாம்; சிலருக்கு, 'அல்ட்ரா சவுண்டு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' தேவைப்படும்.

துவக்கத்தில் வலியை கட்டுப்படுத்த, ஸ்டிராய்டு, வலி நிவாரண மாத்திரைகள் தர வேண்டியிருக்கும். இந்த இரண்டும் அதிக நாட்கள் சாப்பிட்டால், சிறுநீரகங்கள், கல்லீரலை பாதிக்கலாம்; அல்சர் வரலாம்; இதயத்தையும் பாதிக்கலாம்.

அதனால், டாக்டரின் ஆலோசனையில், எத்தனை நாட்கள் டாக்டரின் ஆலோசனைபடி மாத்திரை எடுத்து கொண்டால், எந்தப் பிரச்னையும் வராது. ஸ்டிராய்டு மாத்திரைகளால் உயர் ரத்த அழுத்தம், கண் அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை கோளாறு, எலும்புகள் பலிவீனமாகும் 'ஆஸ்ட்டியோபோரோசிஸ்' போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மிக அவசியம். சில மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது, இது கேன்சர் மாத்திரை என்று நினைத்து பயப்படுவர். நாங்கள் தரும் சில மாத்திரைகள், கேன்சருக்கும் பயன்படுகின்றன.

இந்த பிரச்னைக்கு மிக குறைந்த 'டோஸ்' தான் தருவோம். மாத்திரைகளுடன், 'பிசியோதெரபி' செய்தால் நல்லது; உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவையில்லை; காபி, சிகரெட், ருமட்டாய்டை அதிகப்படுத்தும்.

டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்,

முடக்குவியல் சிறப்பு மருத்துவர்,

சென்னை.

98408 20053

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us