நடப்பதில் தள்ளாட்டம் இருந்தால் வாக்கர் பயன்படுத்த தயங்க கூடாது
நடப்பதில் தள்ளாட்டம் இருந்தால் வாக்கர் பயன்படுத்த தயங்க கூடாது
PUBLISHED ON : டிச 29, 2024

'முதியோரை போற்றிப் பாதுகாத்தால்தான், வளமான சமுதாயம் உண்டாகும்,'' என்கிறார் கோவை அரசு மருத்துவமனை பொதுமருத்துவத்துறை தலைவர் சிவக்குமார். அவர் கூறியதாவது:
முதியவர்களின் முழுப்பங்களிப்பு, அனைத்து தலைமுறைக்கும் முக்கியமான ஒன்று. வயது அதிகரிக்கும் போது, நீண்ட நாள் நோய்கள் உருவாகி, உடல்நலம் குறைந்து போக வாய்ப்புண்டு. அவர்களின் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகி, நோய்கள் தாக்கும் ஆபத்து உள்ளது. பிறரை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்.
இதைக்கருத்தில் கொண்டு, முதியவர்கள் பொதுவான உடல் நலத்துடன் உள்ளோமா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். நோய் இருந்தால், அதற்கான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுப்பழக்கம் முறையாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்டு தவிர்க்க வேண்டிய உணவுகளை, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டும் தவிர்க்க வேண்டும். கண் பார்வை குறைபாடுகள், காதுகேளாமை இருந்தால், அதற்கான உபகரணங்களை எவ்வித தயக்கமும் இன்றி, பயன்படுத்த வேண்டும். நடப்பதில் தள்ளாட்டம் இருந்தால், 'வாக்கர்' பயன்படுத்த வேண்டும். தவறி விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படும். படுத்த படுக்கையாக மீதமுள்ள நாட்களை கழிக்க நேரிடும்.
இரவு நேரத்தில், இயற்கை உபாதை கழிப்பதற்கு வீட்டிலோ, அல்லது பஸ்ஸிலோ செல்லும் போது, வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். வயது என்பது எண் மட்டுமல்ல. அது தேய்மானத்துடன் சேர்ந்தது தான். அதனை உணர்ந்து உதவியோ அல்லது உபகரணங்களோ தேவைப்பட்டால், பயன்படுத்திக் கொள்வதற்கு தயக்கம் இருக்கக்கூடாது.
அடிமைப்படுத்தக்கூடிய மது, சிகரெட் போன்ற பழக்க, வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. ஆண்டுக்கு ஒரு முறை, உடல்நல பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.