PUBLISHED ON : செப் 11, 2021

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல், கல்லுாரி மாணவர்கள் வரை பாஸ்தா, பேல்பூரி, பானிபூரி, தஹிபூரி மற்றும் சமோசா தவிர, இன்னும் வாயில் நுழையாத பெயர்களில் கிடைக்கும் துரித உணவுகளின் மேல் உள்ள காதல், அளவு கடந்த நிலையில் உள்ளது.
நம் பாரம்பரிய உணவுகளான சாம்பார், ரசம், கறிகாய் கூட்டு, மோர், கீரை வகைகளை பரிமாறினால் முகம் சுளிக்கின்றனர். இந்த மேல்நாட்டு உணவுகளின் மேல் உள்ள மோகத்தால், தங்கள் வயிற்றில் ஏற்படக் கூடிய ரசாயன மாற்றங்கள், அவை ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் யோசிப்பதற்கு தயாராகவே இல்லை.
'நுாடுல்ஸ், பர்கர், பீட்சா, பாஸ்தா' போன்றவற்றில் உள்ள மைதா மாவின் கலப்பால், குடல் உட்புற சுவர்களில் ஏற்படும் பல உபாதைகளை, வயது ஏற ஏறத்தான் உணர முடியும்.
குடலில் ஏற்படும் பலவிதமான கிருமிகளை அழிப்பதற்காக, நம் முன்னோர் உணவில் சேர்த்த மணத்தக்காளி கீரை, பாகற்காய், ஓமம், சுண்டைக்காய், கறிவேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றின் பெயரைக் கேட்டாலே, இளைய சமுதாயத்தினர் காத துாரம் ஓடி விடுகின்றனர்.
ஆனாலும், குடலில் கிருமிகள் சேர்வதற்கு அனுமதிக்காத உணவுகளை, அவர்களுக்கு நாம் கொடுத்தால் தான், பின்னாளில் வரக் கூடிய தோல் உபாதைகள், ராஜபிளவை, கண் நோய்களைத் தடுக்க முடியும்.
பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடி, கழிவுகள் ஓரிடத்தில் சேர்வது போன்று, மனித உடலில் பல வித கழிவுப் பொருள்களை சேர்க்கும் இடம், மலக்குழி குடல். உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாறியுள்ள வாழ்க்கைச் சூழலால் உடல், மனம் இவற்றில் இயற்கையாகவே ஏற்பட்டுள்ள சில மாறுதல்களால், சிலருக்கு சில வகை நோய்கள் உண்டாவது சகஜம்; அவற்றில் ஒன்று குடல் கிருமி.
உபாதைகளை உருவாக்கும் கிருமிகள் குடலில் சேராமல் இருப்பதற்கும், அப்படியே சேர்ந்தாலும், வியாதியை விளைவிக்காமல் இருக்க, வருமுன் காக்க சில வழிகளை பின்பற்றலாம்:
* ஒரு பல் பூண்டு போட்டு காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை குடிப்பதால் ஏற்படும் பேதியால் கிருமிகளை வெளியேற்றலாம்
* வேப்பிலைக் கொழுந்து, ஓமம் சேர்த்து அறைத்த உருண்டை, இரவு முழுவதும் ஊறிய கறிவேப்பிலை, முருங்கை காம்பு நீர், மணத்தக்காளி இலைச் சாறு, இவற்றில் ஏதேனும் ஒன்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
* வாயு விடங்கம் மூலிகை 15 கிராமை ௧ லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டர் குறையும் வரை காய்ச்சி, ஆற வைத்து, காலை, மாலை இரு வேளையும் தலா 125 மி.லி., குடித்தால், குடல் கிருமி நசிந்து விடும்
* வேப்பம்பூ ரசம் அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
இது தவிர, மாணிபத்ரம், கிருமிஹர சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை, டாக்டரின் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்ளலாம்.
டாக்டர் எஸ். ரஞ்சனி சாய்ராம்,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை.
94444 41771
