PUBLISHED ON : ஆக 28, 2022

'டைரக்ட் மார்க்கெட்டிங்' எனப்படும் நேரடி விற்பனை செய்யும் இளைஞர்கள் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் மிகவும் அதிகம். இவர்களைத் தவிர, நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்பவர்களுக்கு, 'வெரிகோஸ் வெய்ன்' எனப்படும், கால்களில் நரம்பு சுருளும் பிரச்னை அதிகம் வருகிறது.
அதிலும், உடல் எடையும் அதிகமாக இருந்தால், இப்பிரச்னை வரும் அபாயம் அதிகம்; ஆண்களை விட, பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்ய வேண்டியவர்கள், ஓய்வே இல்லாமல் அதிக நேரம் நடக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில், கால்களில், 'நமநம' என்று வலி ஏற்படும்.
உட்கார்ந்தாலோ, படுத்தாலோ வலி குறையாது; கால்களை சற்று உயரமாக துாக்கி வைத்தால், சில நிமிடங்களில் வலி குறைந்து விடும். இது தான், வெரிகோஸ் பிரச்னை இருப்பதற்கான ஆரம்ப அறிகுறி; கால்களில் வீக்கமும் ஏற்படலாம். இந்த நிலையிலேயே கண்டறிந்தால், தடுப்பது சுலபம்.
நரம்பு சுருள என்ன காரணம்?
கால்களில் ரத்தம் தேங்குவதால், இந்தப் பிரச்னை வருகிறது. இதயத்தில் இருந்து, ரத்த நாளங்கள் வழியாக, கால்களுக்கு ரத்தம் வருகிறது. மீண்டும், ரத்தக் குழாய் வழியே இதயத்திற்கு ரத்தம் செல்லும். நீண்ட நேரம் நிற்பதால், தோலின் அடியில் செல்லும் ரத்தக் குழாய்களில், ரத்தம் தேங்காமல் இருக்கச் செய்யும் வால்வுகள், மூடியபடியே இருக்கும்.
இப்படி, பல மணி நேரம் மூடியபடியே இருக்கும் ரத்த வால்வுகள், பலவீனமாகி உடைந்து விடும். அந்த இடம் பலுான் போல வீங்கத் துவங்கும்; ரத்த ஓட்டமே இல்லாமல், நரம்புகள் சுருண்டு விடும்.
நீண்ட நேரம் நிற்பவர்களைத் தவிர, மரபியல் காரணங்களாலும் வரலாம். கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் கனம் அதிகம் இருப்பதால், கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வெரிகோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தை பிறந்த இரண்டாண்டுகள் கழித்தே, அறிகுறிகள் தெரியத் துவங்கும். அதிக உடல் பருமனால் அடிவயிறு, தொடைப் பகுதியில், கொழுப்பு அதிகம் இருந்தாலும் கால்களில் அழுத்தம் ஏற்பட்டு, பிரச்னை வரும்.
வராமல் தடுக்க...
உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்க வேண்டியது அவசியம். அதேபோல், நின்றே வேலை செய்பவர்கள், குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்து, கால்களை பின்னால் மடக்கி, நீட்டி, சில பயிற்சிகளை செய்து கொள்ள வேண்டும்.
பிரச்னையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள், இறுக்கமான சாக்ஸ் அணிந்து கொண்டால், பிரச்னை தீவிரமாகாமல் தடுக்க முடியும். இதற்கான டாப்ளர் பரிசோதனையை செய்யும் போது, பெரும்பாலும் உட்கார வைத்தோ, படுக்க வைத்தோ செய்கின்றனர். நிற்க வைத்து செய்யும் போது தான், நரம்புகளின் பாதிப்பை தெளிவாக கண்டறிய முடியும்.
இந்த பிரச்னைக்காக ஆலோசனைக்கு வருபவர்களில், பெரும்பாலும் இதே அறிகுறிகள் இருப்பதாக கூறுகின்றனர்; அந்த அளவிற்கு வெரிகோஸ் பொதுவான பிரச்னையாகி விட்டது.
டாக்டர் எம்.பக்தவச்சலம்
ரத்தநாள சிறப்பு மருத்துவர்,
சென்னை
98401 33365
