PUBLISHED ON : பிப் 23, 2021

அக்யுபங்சர் என்ற இயற்கை சிகிச்சையில், உடலில் குறிப்பிட்ட புள்ளிகளை துாண்டும்போது, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தக்க வைக்க முடியும்.
மன அழுத்தம் அதிகரித்தால், அது, மனதை மட்டும் பாதிக்காது; உடலிலும் ஆங்காங்கே சேர்ந்து அப்படியே தங்கி விடும். உடலில் தேங்கும், 'ஸ்ட்ரெஸ்' நாளடைவில் மனப் பதற்றத்தை ஏற்படுத்தும்.
அக்யுபங்சர் முறையில், உடலின் குறிப்பிட்ட இடத்தில் துாண்டினால், தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை தானாகவே சரி செய்யும் திறன், உடம்பிற்கு வந்து விடும்.
அக்யுபங்சர் புள்ளிகள்
அதிக நேரம் நின்றபடியே வேலை செய்வதால், சிறுநீரகங்கள், சிறுநீர் பைகளுக்கு செல்லும் சக்தி குறையும்; இதனால், சோர்வு, இடுப்பு வலி வரும். முதுகின் பின்பக்கம் தண்டுவடத்தில் உள்ள சில நரம்புகளை துாண்டுவதன் வாயிலாக, இந்த வலி, சோர்வு சரியாகும்.
அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால், வயிறு, மண்ணீரல் போன்ற உறுப்புகளில் சக்தி இல்லாமல் போகும். இதனால், ரத்த சோகை, செரிமானப் பிரச்னைகள் வரலாம்.
இதற்கு காலின் வெளிப் பகுதியில், முழங்கால் நரம்புகளை துாண்டுவதால், இவற்றிற்கு சக்தியை அதிகப்படுத்த முடியும். சளி, காய்ச்சல், சுவாச பிரச்னைகள் என்று எதுவானாலும் சரியாகும்.
அதிக நேரம் படுத்திருப்பது, படுக்கையிலேயே வேலைகளை செய்வது, பெருங்குடல் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படும்; சுவாச பிரச்னைகள், கழிவுகள் வெளியேறாமல், பிரச்னைகள் வரலாம்.
இதை சரி செய்ய, ஆள்காட்டி விரல், கட்டை விரல் இரண்டையும் சேர்த்து, இரண்டு விரலுக்கும் நடுவில் தெரியும் புள்ளியில் அழுத்தம் கொடுப்பதால், சுவாச, குடலில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய முடியும். தோள்பட்டை, பல் வலி, தலைவலி, மூட்டு வலியும் சரியாகும்; மலச்சிக்கலையும் போக்கும்.
அதிக நேரம் மொபைல் போன் பார்த்தபடி, லேப்டாப், கம்ப்யூட்டரில் வேலை செய்வதால், சிறுகுடலுக்கு, இதயத்திற்கு செல்லும் சக்தி பாதிக்கப்படலாம்; இதனால், சமச்சீரற்ற மனநிலை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
விலா எலும்புகள் அருகில் உள்ள புள்ளிகளை துாண்டுவதன் மூலம், ஆற்றலை அதிகப்படுத்தலாம்.
போதுமான ஓய்வே இல்லாமல், அதிக நேரம் வேலை செய்வது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, பித்தப்பை, கல்லீரலுக்கு செல்ல வேண்டிய சக்தி குறையலாம்; அதனால், உடம்பில் தசைப் பிடிப்பு ஏற்படலாம்.
மேல் பாதத்தில் உள்ள புள்ளிகளை துாண்டுவதால், இதை சரி செய்யலாம். பாதத்தில் மேல்புறம் கட்டைவிரலுக்கும், இரண்டாவது விரலுக்கும் நடுவில், மேல்புறத்தில் அழுத்தம் கொடுப்பதால், சோர்வு நீங்கும்; வாயுத் தொல்லை, தலைவலி, வயிற்றில் அமிலம் அதிக அளவில் சுரப்பது போன்றவை சரியாகும்.
டாக்டர் யோ.தீபா,
தலைவர்,
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை கைநுட்ப பிரிவு,
அரும்பாக்கம், சென்னை.
044 - 2622 2516
