PUBLISHED ON : அக் 24, 2010

எஸ்.ராஜேந்திரன், சிவகங்கை: எனக்கு இரு மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் மாரடைப்பு வந்த ரத்தக்குழாயில் 40 சதவீதம் அடைப்பு உள்ளதாக தெரிந்தது. இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?
இதயத்தில் உள்ள ரத்தநாளத்தில் ரத்த ஓட்டம் முழுவதும் தடைபட்டால், மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது மிகநவீன சிகிச்சை முறைகள் உள்ளன. முதலாவதாக 'Thrombo Lytics' என்னும் ரத்த நாள அடைப்பில் உள்ள ரத்தக்கட்டியை மருந்து மூலம் சரி செய்வது. இரண்டாவதாக, அடைப்பு உள்ள இடத்தில் நேரடியாக ஒரு பலூனை செலுத்தி, அடைப்பை நீக்கி Stent பொருத்தப்படுகிறது. இது Primary Angio Plasty எனப்படுகிறது. உங்களுக்கு கொடுத்த மருந்தாலோ அல்லது இயற்கையின் கருணையாலோ அடைப்பு 40 சதவீதம் தான் உள்ளது.
இதற்கு பலூன் முறையோ அல்லது அறுவை சிகிச்சை முறையோ தேவையில்லை. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கவழக்கம், தினசரி நடைப்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்திருப்பது, மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்வது முக்கியம். மருந்து வகைகளில், Anti Platelets மற்றும் Statin வகை மருந்துகள் அத்தியாவசியமானவை.
என்.குமாரசாமி, ராஜபாளையம்: எனக்கு 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தி நான்கு ஆண்டாகிறது. இக்கருவி எத்தனை ஆண்டுகள் செயல்படும்?
பேஸ்மேக்கர் என்பது இதயத்தின் மின்னோட்டத்தில் தடை ஏற்படும் போது, பொருத்தப்படும் ஜெனரேட்டர் போன்ற கருவி. இதில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒன்று Lead அல்லது Wire, மற்றொன்று Pulse Generator அல்லது Battery எனப்படும்.
பொதுவாக தற்போதுள்ள நவீன கருவிகளில் இந்த பாட்டரி 10 முதல் 15 ஆண்டுகள் செயல்படும். அதன் பிறகு அந்த பாட்டரியை எளிதில் மாற்றிவிட இயலும். அதற்கு தற்போதுள்ள பேஸ்மேக்கர் கம்பெனிகள் வாழ்நாள் முழுவதும் உத்தரவாதம் (வாரன்டி) கொடுக்கின்றன. எத்தனை முறை பாட்டரி மாற்றினாலும் அதை இலவசமாகவே தருகின்றனர். எனவே உங்கள் பாட்டரி ஆயுள் பற்றி கவலைப்பட தேவையே இல்லை.
ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி: 'மயோபதி '(Myopathy) ) என்றால் என்ன?
இதய தசையில் ஏற்படும் வியாதியே மயோபதி.Myo என்றால் தசை. Pathy என்றால் வியாதி என்று பொருள். இதய தசைகளில், Dilated, Hyper Trophic, Restrictive என்ற மூன்று வகை பாதிப்புகள் ஏற்படலாம். Dilated மயோபதியில் இதயத்தில் உள்ள அறைகள் வீங்கிக் கொண்டு, அதன் பம்பிங் திறன் குறைகிறது. Hyper Trophic மயோபதியில், இதயத்தில் உள்ள தசைகள் வீங்கிக் கொண்டு, அதனால் இதயம் பாதிக்கிறது.
Restrictive மயோபதியில் இதயத்தின் விரியும் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் கோளாறு ஏற்படுகிறது. இம்மூன்று வகைகளில் எந்த வகையில் பாதித்துள்ளது என்பதற்கு ஏற்பவே சிகிச்சை முறை அமைகிறது.
கி.சங்கரபாண்டியன், திருப்புவனம்: மாரடைப்பு வந்தவருக்கு எந்த வகை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்?
இன்றைய இதய மருத்துவத்தில் அற்புதமான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், எவ்வளவு சீக்கிரம் அவர், இதய நிபுணரிடம் கொண்டு செல்லப்படுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு பலன் கிடைக்கிறது. ஒவ்வொரு நிமிட தாமதமும், அவரது உயிருக்கு எதிரான தருணம்.
மாரடைப்பு வந்தவருக்கு உடனடியாக Aspirin 325 மி.கி., தரப்பட வேண்டும். இந்த மாத்திரை வலிக்காக கொடுக்கப்படுவதல்ல. இதய ரத்த ஓட்டம் சீராக தரப்படுவது. மிக முக்கியமாக Isordil வகை மாத்திரையை நாக்குக்கு அடியில் வைக்க கூடாது. ஏனெனில் சிலவகை மாரடைப்பின் போது, அந்த மாத்திரையை நாக்கின் கீழ் வைத்தால், அது இதயத்தை கொடூரமாக பாதிக்கிறது. எனவே எந்தளவுக்கு விரைவாக இதய டாக்டரிடம் செல்கிறோமோ அந்தளவிற்கு அந்த நபருக்கு பலன் கிடைக்கும். குறிப்பாக தற்போதுள்ள நவீன மருத்துவத்தில் ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்துகள் மற்றும் பலூனை செலுத்தி ரத்த அடைப்பை சரி செய்யும் முறைகள் உள்ளன. டாக்டர் விவேக் போஸ், மதுரை.

