PUBLISHED ON : ஏப் 17, 2021

செரிமான மண்டலத்தில் நன்மை செய்யக் கூடிய கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இருப்பதை போலவே, தோலின் மேல் பகுதியிலும், கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உயிர்ப்புடன் வாழ்கின்றன. இவை, தீங்கை விளைவிக்கும் கிருமிகள், தோல் வழியே உடலினுள் செல்வதை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியாக வேலை செய்கின்றன.
'மெட்டபாலிசம்' எனப்படும் உடலின் உள்செயல்பாடுகளுக்கு தேவையான விட்டமின்கள், ஹார்மோன்கள், அவசியமான வேதிப் பொருட்களையும், இந்த நுண்கிருமிகள் உற்பத்தி செய்கின்றன. 'மைக்ரோப்யம்' எனப்படும் இந்த நுண்கிருமிகள் போதுமான அளவில் தோலில் இல்லாவிட்டால், தோல் சிவந்து போவது, வறட்சி, எரிச்சல், வெளியில் சென்று வந்ததும் ஏற்படும் அரிப்பு, அக்கி, தோல் உடைவது உட்பட, பலவித நோய்களை உண்டாக்கும். பளபளப்பாக தோல் இருக்க வேண்டும் என்று, புதிது புதிதாக கிரீம்கள், லோஷன்களை பூசுகிறோம். குறிப்பாக, முகத்தில் கிரீம்கள் தடவுவது வாடிக்கை. இன்னொரு புறம், சுத்தமாக இருக்க வேண்டும் என்று, விதவிதமாக சோப்புகளை உபயோகித்து, அழுத்தி, பலமுறை தேய்ப்பது. குறிப்பாக, முகம் கழுவும் போது, சோப்பு, 'பேஸ் வாஷ்' போட்டு அழுத்தி தேய்ப்பது தவறு.
இப்படி செய்வதால், தோலின் மேல்புறத்தில் மென்மையான கீறல்கள் ஏற்படுவதோடு, சிதைவையும் ஏற்படுத்தும்; நன்மை செய்யும் நுண்கிருமிகள் அழிந்து போகும். கடினமான வேதிப்பொருட்கள் சேர்ந்த சோப்பு, கிரீம், லோஷன்களை பயன்படுத்தவே கூடாது. துணிகளுக்கு பயன்படுத்தும் சலவை சோப்பு மற்றும் துாள், கடினமான வேதிப் பொருள் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
'ஆன்டி பாக்டீரியல்' என்று குறிப்பிடப்படும் சோப்பு மற்றும் ஷாம்புகள், கெட்ட பாக்டீரியாவை மட்டுமல்ல, நன்மை செய்யும் பாக்டீரியாவையும் சேர்த்தே அழித்து விடும்.'புரோ பயாடிக்' எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த பானங்கள், தயிர் குடிப்பது, பாக்டீரியா உற்பத்திக்கு பயன் தருமா என்பதை, உறுதி செய்ய போதுமான ஆய்வுகள் செய்யப்படவில்லை.
இவை, செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவலாம் என, சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவிரமான தோல் அலர்ஜி இருப்பவர்கள், புரோ பயாடிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
டாக்டர் தீபிகா லூனாவர்ட்,
தோல் மருத்துவ ஆலோசகர்,
போர்டிஸ் மலர் மருத்துவமனை
சென்னை
99625 99933, 91761 15900
