PUBLISHED ON : ஜூன் 17, 2015
ஸ்ரீதிவ்யா, கடலூர்: கர்ப்பமான முதல் மூன்று வாரங்கள், கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனரே, ஏன்?
குழந்தையின் இதயம் அந்த காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை, இதய பிரச்னையுடன் பிறக்கக்கூடும். மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று மாத காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத காலத்திலும், மூளையானது வளர்ச்சியடையும். அதேபோல், சிறு மூட்டுகளும் அந்த காலகட்டத்தில் தான் உருவாகும். அதைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் மூன்று மாத காலத்தில், மூட்டுகளைச் சுற்றி தசைகள் உருவாகும். அந்த காலகட்டத்தில், கர்ப்பிணிகள், 'கால்சியம்' நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், குழந்தையின் மூட்டு தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சில கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை பிரசவம் வரை எடுத்து வருவது நல்லது.
சாந்தி, மகப்பேறு மருத்துவர், சென்னை.
திவாகர், கொரட்டூர், சென்னை: அடிக்கடி தலைவலி, எரிச்சல், மனஅழுத்தம், சோம்பல் மற்றும் களைப்பு ஏற்படுகிறது. அவற்றை போக்க, என்ன செய்ய வேண்டும்?
பால், மன அழுத்தத்திற்கான நச்சு முறிவுப் பொருள். மனஅழுத்தம், 'செரடோனின்' அளவை குறைக்கும். 'செரடோனின்' என்பது உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் உடம்பில் உள்ள ஒரு ரசாயனம். பாலில் திடமான புரதம் உள்ளதால், அது 'ட்ரிப்டோபன்' அளவை அதிகரிக்கும். ஆனால், சர்க்கரை மற்றும் காபியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பிடித்த இசையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேளுங்கள். உலகளாவிய ஆய்வின் படி, இசை, வேலையினால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும்.
பிரபஞ்சன், மனநல நிபுணர், பாண்டிச்சேரி.
பத்மா, அடையாறு, சென்னை: குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி, எளிய முறையில் எப்படி சொல்லிக் கொடுப்பது?
குழந்தைகளுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் அதை அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்பர். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம், செய்கையுடன் பாலியல் கொடுமைகளைப் பற்றி சொல்லுங்கள். குழந்தைகளுக்கு ஒருவர் எந்த எண்ணத்தில் தொடுகிறார் என்பதை, பெற்றோர் அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒருவர் பேசும் போது, கைகள் மற்றும் கன்னத்தை மட்டும் செல்லமாக கொஞ்சி தொட்டால், அதில் காமம் இல்லை என்று சொல்லுங்கள்.
அம்மாவைத் தவிர வேறு யாரேனும் அந்தரங்க உறுப்புகளை தொட்டால், உடனே தங்களிடம் வந்து சொல்ல வேண்டும் என்றும், இனிமேல் அவர்களுடன் பேசவோ, பழகவோ கூடாது என்றும் சொல்லிக் கொடுங்கள்.
வளர்மதி, வளரிளம் பருவ மருத்துவர், சென்னை.
