PUBLISHED ON : ஜூன் 17, 2015

1 'எக்ஸிமா' என்றால் என்ன?
'எக்ஸிமா' என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்; அரிப்பும் இருக்கும்.
2 'எக்ஸிமா' ஏற்பட காரணங்கள் என்ன?
தோலில் ஏற்படும் ஒவ்வாமை, தோலை தடிமனாக்கும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாவதால், அந்த பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்.
3 'எக்ஸிமா'வின் அடையாளம் என்ன? எதனால் ஏற்படுகிறது?
தோல் காய்ந்து (வறண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும். உடல் வெப்பம், மனஅழுத்தம், கவலை போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இதை சொறிவதனால் ஏற்படும் புண்கள், பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பை அதிகரிக்கும்.
4 எந்த வயதினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்?
குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும், வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களும், முதியவர்களும், வயது வித்தியாசம் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.
5 உடலின் எந்தெந்த பகுதி, தோலில் இதுபோன்று பாதிக்கப்படும்?
இந்த வகை வட்டவடிவுள்ள புண்கள், கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின் மடியும் பகுதி, கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும் பாதத்தில் ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், கன்னங்களில் சிவப்பு நிற கொப்புளங்கள் போல் தோன்றும். சில மாதங்களில் கை மற்றும் கால்களில், சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்றும்.
6 யாருக்கு 'எக்ஸிமா' மிக அதிகமாக ஏற்படக் கூடும்?
'எக்ஸிமா' பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் உள்ளோருக்கு ஏற்படும். குடும்ப வழியில், 'எக்ஸிமா' மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை நோய் பாதிப்பு உடையோருக்கும் ஏற்படும்.
7 'எக்ஸிமா'வை அதிகப்படுத்தும் காரணிகள் உண்டா?
நிறைய காரணங்கள் உண்டு. அவை நபருக்கு நபர் வேறுபடும். சுற்றுச்சூழல் காரணிகள் (குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு), பால், முட்டை போன்ற சில உணவு வகைகள், மன அழுத்தம், வறட்சியான சீதோஷ்ண நிலை மற்றும் தோல் வறண்டு காணப்படுதல் நிலைமையை மோசமாக்கும்
8 எப்படி கட்டுப்படுத்துவது?
மேற்கூறிய நிலைமையை அதிகப்படுத்தும் காரணிகளின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம், இந்த நோயின் அறிகுறிகள் அதிகப்படுவதை கட்டுப்படுத்தலாம். காலை, மாலை என, இருவேளை குளித்து, தூய்மையான ஆடையை அணிந்து, சுத்தமாக இருப்பதன் மூலமும், இதை கட்டுப்படுத்தலாம்.
9 'எக்ஸிமா'வை கண்டறிவது எப்படி?
ஒருவரின் குடும்பத்திலோ அல்லது அந்த நபருக்கோ, ஒவ்வாத பொருள் ஏதேனும் உண்டா என்பதை கண்டறிவதன் மூலமும், உடற்கூறு சோதனைகள் மற்றும் தேவைப்படின் மற்ற ஆய்வக சோதனைகள் மூலமும், 'எக்ஸிமா'வை கண்டறியலாம். சில வேளைகளில், 'பயாப்ஸி' மூலம், தோலின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதிப்பதின் மூலம், மற்றும் ரத்த பரிசோதனைகளின் வாயிலாகவும் கண்டறியலாம்.
10 நாள்பட்ட 'எக்ஸிமா'வால் ஏற்படும் விளைவுகள் என்ன? சிகிச்சைகள் உண்டா?
இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை உடையது. அதனால், உடலில், வடுக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படும். பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலால் நிறம் குறைதல், பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலூட்டும் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்த நோயின் அறிகுறிகள் அதிகரிப்பதை தவிர்க்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியை சொறிவதை தவிர்க்கவும். சோப்பு உபயோகிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். குணமாக்கும் மருந்துகள் பற்றி அறிந்துக்கொள்ள மருத்துவரை அணுகவும்.
- வேணுகோபால்,
சரும நிபுணர்,
சென்னை.
