PUBLISHED ON : மார் 23, 2016
என் வயது 74. என் இதய ரத்தக் குழாயில், 6 ஆண்டுகளாக 3 அடைப்புகள் உள்ளன. இதற்கு மாத்திரைகளை மட்டும் சாப்பிடுகிறேன். அறுவை சிகிச்சை செய்யவில்லை. இரைப்பையில் புண் இருப்பதால் பேன் டி மாத்திரையையும் சாப்பிடுகிறேன். இரைப்பையில் ஏற்பட்ட புண்ணால் இதயத்திற்கு ஆபத்து ஏற்படுமா?
எஸ்.தங்கவேலு, மதுரை
ரத்த உறைவைத் தடுப்பதற்காக, 'பிளட் தின்னர்' மாத்திரைகளை உங்களுக்கு டாக்டர்கள் சிபாரிசு செய்திருப்பர். தொடர்ந்து அந்த மாத்திரைகளை சாப்பிடும்போது வயிற்றில் அல்சர் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயிற்று புண்ணிற்காக சாப்பிடும் மாத்திரைகளால் அல்லது புண்ணால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாது. நீங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக, இதய ரத்தக் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பிற்காக மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறீர்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேவையான பரிசோதனைகள் செய்து இதயத்தின் தன்மையை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறும் மருத்துவமனையிலேயே குடல், இரைப்பை சிறப்பு மருத்துவர் மற்றும் இதய சிறப்பு மருத்துவர் இருவரின் ஆலோசனையையும் பெற்று அதன்படி மாத்திரைகளை சாப்பிடுங்கள்.ஒரு முறை டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை பல மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து, தற்போது இருக்கும் உடல் நிலைக்குத் தகுந்தவாறு மாத்திரைகளை மாற்ற வேண்டியது முக்கியம் என்பதால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள்.
டாக்டர் கே.சுப்ரமணியம்
இதயநோய் சிறப்பு மருத்துவர், சிம்ஸ் சென்னை.
என் 10 வயது பெண் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறாள். இரவு படுக்கப் போகுமுன் பாத்ரூம் போய்விட்டு வந்துதான் படுக்கிறாள்; இதை சரி செய்வது எப்படி?
ஜானகிராம் பொள்ளாச்சி.
பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கும் பிரச்னை இது. படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இரண்டரை வயதோடு இயல்பாக சரியாகிவிட வேண்டும். அது 6, 7, 10 வயது என்று தொடர்ந்தால் பிரச்னைதான். இந்த பழக்கத்திற்கு, 90 சதவீதம் மரபியல் தான் காரணம். குழந்தையின் அம்மா, அப்பா அல்லது நெருங்கிய ரத்த சொந்தங்கள் யாருக்காவது இந்தப் பழக்கம் இருந்திருக்கும்.
மனரீதியான காரணங்களும் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு பிளாடர் கண்ட்ரோல் தாமதமாக வரும். இதற்காக தற்போது நடைமுறையில் உள்ள மருந்துகள், குழந்தையின் மூளையை பாதிக்கும் என்பதால் மருந்துகளை பொதுவாக சிபாரிசு செய்வது இல்லை. குழந்தையிடம் நடத்தை மற்றும் மனரீதியான மாற்றங்களை கொண்டுவர பயிற்சிகள் தருவது ஒன்றுதான் இதற்கு தீர்வு. அலாரம் சிஸ்டம் கொண்ட கருவி ஒன்று உள்ளது. குழந்தை லேசாக துணியை நனைக்கும்போதே, இந்த அலாரம் அடித்து அலர்ட் செய்துவிடும். பெல் சத்தம் கேட்டவுடன் எழுந்து பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கற்றுத் தருவோம். நாங்கள் கற்றுத் தரும் நடைமுறைகளை குழந்தை சரியாகச் செய்தால் அதை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுப் பொருள் தருவோம். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, தீவிரமான மலச்சிக்கல், போன்ற காரணங்களாலும் படுக்கையை நனைக்கும் பழக்கம் இருக்கும். காரணம் என்ன என்பதை தெரிந்து அவசரப்படாமல் பொறுமையாக, இந்தப் பழக்கத்தில் இருந்த மீள குழந்தைக்கு
உதவ வேண்டும்.
டாக்டர் தீபா ஹரிஹரன்
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சூர்யா மருத்துவமனை, சென்னை
